பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11

ஆனால், 18-ம் நூற்றாண்டில் கவுண்ட் நிகோலஸ் டால்ஸ்டாய் என்பவர், தனது பரம்பரையின் மரியாதையினையும் முன்னைய மதிப்பையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமென்று பாடுபட்டார். தகுதியும், திறமையும் உள்ள நிகோலஸ், தனது இளமையான வயதிலேயே ராணுவப் படையில் சேர்ந்தார். ஆனால், சில மாதங்களுக்குள் அவர் எதிரிகளால் சிறைபிடிக்கப் பட்டார்.

சிறையிலே இருந்து வெளிவந்த நிகோலஸ் டால்ஸ்டாய், தனது தந்தையார் வைத்திருந்த மீதி நிலத்தில் விவசாயம் செய்தார். அதே நேரத்தில், அவருக்கும் மேரிவால் கான்ஸ்கி என்ற இளவரசிக்கும் திருமணம் நடந்தது; திருமணப் பரிசாக நிகோலஸ் டால்ஸ்டாயிக்கு நிலம் கிடைத்தது.

தனது தந்தையின் நிலத்தையும், மனைவியின் நிலத்தையும் சேர்த்து அவர் விவசாயம் செய்தார். முழுக்கவனத்தையும் அவர் வேளாண்துறையிலே செலுத்தி, அரிய உழைப்பாற்றிப் பயிரிட்டதால், அறுவடை மூலம், நல்ல செல்வ நிலையினைப் பெற்றார்.

நிகோலஸ் டால்ஸ்டாய், பசு போன்ற குணமுடையவர்; இனிமையாகப் பேசுபவர், இரக்கப் பண்புடையவர்; கோபம் வந்தால் தான் ராணுவ மிடுக்கும், தோற்றமும், செயலும், வீரமும் கொள்வார். இதையெல்லாம் நன்கு தெரிந்து கொண்ட அக்கம் பக்கத்து ஊர் மக்கள் எல்லாம் அவரிடம் அன்புடன் பழகி நண்பர்களானார்கள்.

ஜார் மன்னன் ஆட்சியிலே நிலப்பிரபுக்கள், உழவர் பெருமக்களை அடிமையாகவும், இரக்கமற்றும் நடத்திவந்த கொடுமையான நேரத்தில், நிகோலஸ் டால்ஸ்டாய் மட்டும் சற்று வித்தியாசமாக, மனித நேயமாக, இரக்கமாக, கருணையாக, பொறுமையாக, பொறுப்பாக, நேர்மையாக, நடந்து கொண்டார்!