பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

21

கல்லூரி, செல்வந்தர்கள், பிரபுக்களின் பிள்ளைகளுக்காகவே நிறுவப்பட்ட கல்லூரியாகும்.

அங்கே கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது மனம் போன பாதையில் படிப்பவர்களாவர். யாரும் அவர்களைத் தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ முடியாது; தங்களது பாடங்களை விருப்பம் போல மாற்றிக் கொண்டு அங்குள்ள மாணவர்கள் படிப்பார்கள்; அதை எவரும் ஏன் எப்படி என்று கேட்க முடியாது. காரணம், அவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கவலை இல்லாததுதான்!

கல்லூரியை சுற்றிலும், மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், உணவு விடுதிகள், பொழுது போக்கும் கேளிக்கை மன்றங்கள், ஆடல் பாடல் அரங்குகள், நாடகங்கள் போன்றவை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். செல்வச் சீமான்கள், பிரபுக்களின் பிள்ளைகள் படிக்கும் பல்கலைக் கல்லூரி தானே அது அதற்கேற்றவாறு எல்லா ஆனந்தங்களையும் அங்கே அனுபவிக்கும் வசதிகள் உண்டு.

இதே நேரத்தில், டால்ஸ்டாய் வீட்டை நிர்வாகம் நடத்தும் அவரது சிறிய தாயார். தனது வீட்டிலேயே தன்னைச் சார்ந்த ஆண்-பெண் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆடல் பாடல், கேளிக்கை விருந்துகள் நடத்துவாள். அதனால், படிக்கக் கல்லூரி வந்த அவருக்கும் தனது வீட்டிலேயே உறவுக்காரி நடத்தும் எல்லா இன்ப போகங்களிலும் கலந்து கொள்ளும் ஆர்வம், பழக்கம் அதிகமாகி, நாளாவட்டத்தில் வழக்கமான மகிழ்ச்சியாகவும் மாறிவிட்டது. அதனால் அவருக்குப் படிப்பும் கசந்தது; ஊர் சுற்றும் பழக்கமும் உருவானது; எந்தத் தீயப் பழக்கத்திற்கும் அவர் வெளியே போகாமல், தனது வீட்டிலேயே எல்லா மகிழ்ச்சிகளையும் பெற முடியும் என்ற சூழலமைந்தது.