பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

லியோ டால்ஸ்டாயின்

அந்தப் பாடகன் அங்குக் கூடியிருந்த மக்கள் இடையே பாடிப் பரவசப்படுத்தினார். பாடலைக் கேட்டு சபாஷ் போட்டார்களே தவிர, ஒருவரும் அவரது நிலையினை, அறிந்து ஒரு காசும் தரவில்லை. என்ன செய்வான் பாடகன்?

இந்தக் காட்சியைக் கண்ட டால்ஸ்டாய் ஐயோ பாவம்! என்று வருந்தி, பாடகரைத் தன்னுடன் அழைத்துச் சென்று, வேண்டிய உணவும் மற்றும் தேவைகள் அனைத்தையும் வழங்கினார். இதைக் கண்ட கூடியிருந்த இசைச் சுவைஞர்கள், மற்றப் பயணிகள் எல்லாரும் டால்ஸ்டாயை இழிவாகப் பேசினார்கள். இந்த மனிதநேய ஈனர்களைப் பற்றிக் கவலைப்படாத டால்ஸ்டாய் அதே விடுதியிலேயே மேலும் சில நாட்கள் தங்கிய பின்பு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார்.

ஜெர்மனியிலே எந்தெந்த நகரங்களைப் பார்க்க வேண்டுமென்று அவர் திட்டமிட்டிருந்தாரோ அவற்றையெல்லாம் பார்த்தபின்பு, அவர் ருஷ்யா சென்றார். ருஷியாவுக்கு அவர் திரும்பியபோது அங்கு பனி உறையும் காலமாக இருந்தது. எனவே, பனிக்காலத்தைக் கழிப்பதற்காக டால்ஸ்டாய் தனது குடும்பத்தோடு மாஸ்கோ நகர் சென்றார்.

மாஸ்கோ சென்ற பின்பு, டால்ஸ்டாய் பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றார். வேட்டைக்குச் சென்று வேட்டையாடும் கலையிலே திறமை பெற்றார். அதற்குள் பனிக்காலம் முடிவுற்றது. பின்னர், டால்ஸ்டாய் தனது குடும்பத்துடன் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பி வந்தார். ஊர் திரும்பிய டால்ஸ்டாய், தனது சொந்த நிலங்களை நிர்வகித்து விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்து விவாசயத்தை நன்கு கவனித்து வந்தார்.