பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

லியோ டால்ஸ்டாயின்

நடவடிக்கையின் எதிரொலியாக, டால்ஸ்டாயும் ஓர் ஊராட்சி சபைத் தலைவராக நியமனமானார்.

அடிமைகள் சார்பான நியாயங்களை உணர்ந்து டால்ஸ்டாய் வாதாடியதால் பல தலைவர்கள் அவரிடம் விரோதம் கொண்டார்கள். அதனால் டால்ஸ்டாயைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கோள்மூட்டி அவதூறு செய்தார்கள். இறுதியில், வேறு வழியில்லாமல் அவர் தனது ஊராட்சித் தலைவர் பதவிப் பெறுப்பை விட்டு விலகிவிட்டார்.

ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு அமுல் செய்யப்பட்டிருந்த கல்வித் துறை நிர்வாகத்தை ஆய்ந்த டால்ஸ்டாய், மீண்டும் அந்தக் கல்வி நிலையைப் பற்றி சோதனை செய்யலானார். அந்த சோதனையைக் கடைப்பிடித்துப் பார்க்க அவர் தனது சொந்தக் கிராமத்திலேயே ஓர் ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். அவரது அப்பள்ளியைப் பற்றி அவர் என்ன கூறுகிறார் பார்ப்போமா?

இரண்டு மாடிக் கட்டடத்தில் அந்தப்பள்ளி இருக்கிறது. வகுப்புகள் இரண்டு அறைகளில் நடந்தன. ஆசிரியர்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மற்றும் ஓர் அறை விஞ்ஞான சம்பந்தப்பட்ட கருவிகளை வைக்கவும் பயன்பட்டது. அப் பள்ளியின் நுழைவிடத்தில் மணி ஒன்று கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.

பள்ளியின் கீழ் மாடியில் மாணவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாரலல், ஹரிசாண்டல் பார்கள் இருந்தன. மேல் மாடி அறையில் தச்சு வேலைக்கான கருவிகள் வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு பெரிய அறையில் நிகழ்ச்சி நிரல் பட்டியல் தொங்குகிறது;