பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57

என்ற எண்ணத்திலே டால்ஸ்டாய் மேற்கண்டவாறு வேண்டினார்.

கொடுங்கோலன் தானே ஜாரும் அவனது அரச பரம்பரையும்? எனவே பெருந்தன்மையே இல்லாமல் ஓர் ஞானியின் வேண்டுகோளை அலட்சியம் செய்துவிட்டான்! அதன் பலன் என்ன?

ஜார், பலரை மேலும் சிறையில் அடைத்துப் பழிதீர்த்தான். வஞ்சனைப் படலத்தைத் தொடர்ந்து நடத்திக் கொன்று குவித்தான். கொலையிலே சம்பந்தப்படாத வாலிபர்களை! ஏனென்று எவரும் இந்த அக்ரமத்தைக் கேட்காது ஊமையாக இருந்தபோது பேசியவர்தான் டால்ஸ்டாய் என்ற ஞானி!

ஒரு மனிதாபிமானியின் வார்த்தைகள் மதிக்கப்படவில்லையே என்ற மன வருத்தத்தை மறந்து அவர் சென்றார் மாஸ்கோ நகருக்கு! போன இடத்திலாவது அந்த ஞானிக்கு ஏற்பட்டதா மன அமைதி? இல்லை. அங்கேயும் உள்ள நிலைமை அவரது மனதில் எரியீட்டி சொருகியது போல ஆனது.

அளவுக்கு அதிகமாகப் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு, அளவுக்கு அதிகமான சுகபோக களியாட்ட வெறிகளிலே மூழ்கிக் கிடக்கும் சிலரைக் கண்டார். இரவு பகல் எந்த நேரமும் அவர்கள் இன்பக் கேளிக்கைகளிலே ஈடுபட்டு வெறி மயக்கத்தில் வீழ்ந்துகிடப்பதையும் பார்த்தார். மனம் குமுறினார் டால்ஸ்டாய்!

ஒரு புறம் சோற்றுக்குத் திண்டாடும் மக்கள் கூட்டம்; மறுபுறம் நாய்க்கும் கூட பிஸ்கட்டும் சாராயமும் ஊற்றி அதை வெறியூட்டி முத்தமிடும் கூட்டம்; அடுத்த வேளை உணவுக்கு எலும்பொடியக் கஷ்டப்படும் மக்கள் மீது அந்த நாய்களை ஏவி விட்டுத் துரத்தியடிக்கும் ஆணவ போதையர்களது படாடோப வாழ்க்கையின் ஆர்ப்பாட்டம்!