பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆண்டவனோடு போராடுவோர்

ண்டவனோடு போராடுவோர் என்பது ருஷ்யாவின் பழம்பெரும் மனித இனங்களுள் ஒன்று. அவர்களை ருஷ்ய மக்கள் ‘ஆண்டவனோடு போராடுவோர்’ என்றே அழைப்பார்கள். உள்ளன்போடு உயிரினங்களுடன் பழக வேண்டும் என்பதுதான் அந்த இனத்தின் கோட்பாடு.

இந்த இன மக்கள் தனியார் உடைமையை ஏற்பதில்லை. அதை அவர்கள் பாவம் என்பார்கள். சமூகத்தாரின் எல்லா சொத்துக்களும் ஓரிடத்திலேயே இருக்கும்; அவற்றைக் கொண்டுதான் அவர்களது வாழ்க்கை நடப்பது வழக்கமாகும்.

ஆண்டவனோடு போராடுவோர், தங்கள் கோட்பாடுகளை உறுதியாக நம்பிப் பின்பற்றி வந்தார்கள். அதற்காக அந்த இனத்தவர் அரசு செய்யும் எவ்விதக் கொடுமைகளையும், துன்பங்களையும் ஏற்கத் தயாரானவர்கள், அதனால் அவர்களை அரசாங்கம் கண்காணித்து வந்தது எல்லோருக்கும் நன்மை தராத ஜார் மன்னன் ஆணைகளை அந்த மக்கள் மதிக்கமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள், ஒப்பமாட்டார்கள்.

ஜார் மன்னர் அவர்களை ராணுவத்தில் சேருமாறு கட்டளையிட்டார். ஆனால், ஆண்டவனோடு போராடும் நாங்கள் போராளிகள் அல்லர்; அமைதியை நாட்டிடும் சமாதானவாதிகள். எனவே, எக்காரணம் கொண்டும் ராணுவப் படைகளில் பங்கு பெற மாட்டோம் என்று முரட்டுத்தனமாகவே மறுத்து விட்டார்கள்.