பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

லியோ டால்ஸ்டாயின்

மன்னனது இந்த அலட்சியப் போக்கை உணர்ந்த கிறித்துவ மத குருமார்கள், டால்ஸ்டாயிக்கு சமூகத் தண்டனை விதிப்பதென்று எண்ணி, அவரைக் கிறித்துவ மதத்துரோகி என்று புகார் கூறி, அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தார்கள்.

மதத்தலைவர்கள் அவரை விலக்கி வைத்ததால் மக்கள் இடையே குழப்பமும் கிளர்ச்சிகளும் உருவானது. இந்த மதவிலக்குத் துஷ் பிரச்சாரம் மாஸ்கோ நகருக்கும் பரவியது. இதனால் மாணவர்களும், தொழிலாளர்களும் கலகம் செய்தார்கள். வீதிகள் தோறும் மக்கள் திரண்டு டால்ஸ்டாய் மதத்துரோகியா! என்று கொந்தளித்து ஊர்வலம் வந்தார்கள்.

லியோ டால்ஸ்டாய் வழக்கம்போல உலாவிட்டு வீடு திரும்பும் போது மக்கள் அவரைச் சுற்றி வளைத்து நின்று கொண்டு தங்களது மரியாதையைத் தெரிவித்தார்கள். பலர் பலவிதமாமக அவர்மீது அனுதாபம் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

ஜெர்மன், பாரீஸ், சுவிட்சார்லாந்து, கனடா போன்ற நாடுகளிலே இருந்த டால்ஸ்டாய் வாசகர்களும் சான்றோர்களும், கல்விமான்களும் அவருக்கு ஆறுதல் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்த அன்புள்ளங்களுக்கு தேறுதல் கூறி எதற்கும் கவலைப்பட வேண்டாம், காலம் ஒருநாள் உண்மையை உணர்த்தும் என்று பதில் செய்திகளை அனுப்பி வைத்தார்.