பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வஞ்சிமாநகரம்


ஆயினும் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களாக இருந்தும், அந்தக் கடம்பர்கள் கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்த்துத் தாக்கினார்கள். போர் சிறிது நேரம் நீடித்தது. முடிவில் கடற் கொள்ளைக்காரர்களால் எதிர்த்து நிற்க முடியாமல் போகவே, அவர்கள் தங்கள் தங்கள் மரக்கலங்களில் ஓடி ஒளிந்தார்கள்.

அதுதான் சமயமென்று - புறத்தே அந்த மரக்கலங்களை வளைத்து முற்றுகையை நீக்கவோ, தளர்த்தவோ செய்யாமல் அப்படியே நீடிக்க விட்டுவிட்டுத் தானும் சில தேர்ந்தெடுத்த வீரர்களுமாக ஒவ்வொரு மரக்கலத்தையும் சோதனையிட்டுப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான் குமரன் நம்பி.

அவன் சென்ற முதல் மரக்கலத்திலேயே முற்றிலும் எதிர்பார்த்திராத உதவி ஒன்று அவனுக்குக் கிட்டியது. அவனால் முன்பு அனுப்பப்பட்டிருந்த செவிட்டூமை ஒற்றன் ஒருவன் அந்த மரக்கலத்தின் பாய்மரத்தில் கட்டிப்போடப் பெற்றுச் சிறை வைக்கப்பட்டிருந்தான். அவனை விடுவித்துக் காப்பாற்றியதோடு, மரக்கலங்களில் சோதனையிடுவதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான் குமரன் நம்பி.

முதன் முதலாக ஊமை வேடத்தைத் துறந்து முக மலர்ச்சியோடு படைத் தலைவனிடம் பேசத் தொடங்கினான் விடுவிக்கப்பட்ட வீரன்.

ஆந்தைக்கண்ணனுடைய மரக்கலத்தில்தான் அமுதவல்லி சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் ஒவ்வொரு மரக்கலமாகச் சோதனையிடத் தொடங்கினான் அவன்.

அப்படிச் சோதனையிடத் தொடங்கியபோது சிவ மரக்கலங்களின் கீழறைகளில் பதுங்கியிருந்த கடம்பர்கள் சிலர் சிறைப்பட்டனர்.