❖ நா. பார்த்தசாரதி ❖
109
தீர்க்க முடியாத கடுங்கோபத்தோடு - வேளாவிக்கோ மாளிகையை நோக்கி விரைந்தான்.
அமைச்சர் அழும்பில்வேள் தன்னை ஏமாற்றி விட்டார் என்ற எண்ணம் அவன் மனத்தைக் கொதிப்படையச் செய்திருந்தது. கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன் என்ற முறையில் அமைச்சரின் கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப் பட்டவன் அவன்.
எந்தக் கட்டளையையும் நேரடியாக அவர் அவனுக்கு இட்டிருக்கலாம். அப்படி இட்டிருந்தாலே அவன் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்.
ஆனால் அவர் இப்படிச் சுற்றி வளைத்துக் கூறித் தன்னை ஏமாற்றியதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சர் அழும்பில் வேள் கடற்கொள்ளைக்காரர்களின் முற்றுகையைக் காண்பித்து எவ்வளவோ பரபரப்புக் காட்டினாலும் - அந்த வெற்றியை வாங்கிக்கொடுத்த முயற்சியும் சாதுரியமும் தன்னுடையவையே என்பதைக் குமரன்நம்பி நன்கு உணர்ந்திருந்தான்.
எனவேதான் அவனுக்கு அமைச்சர் அழும்பில்வேள் மேல் பொறுத்துக்கொள்ள முடியாத கோபம் வந்தது.
வேளாவிக்கோமாளிகையைவிட உலகம் பரந்தது-விரிந்தது என்ற உணர்வை அமைச்சருக்கு உண்டாக்கிக் காட்டவேண்டும் போலத் துடி துடிப்பாக இருந்தது அவனுக்கு.
அழும்பில்வேளின் மேலும், வேளாவிக்கோ மாளிகையின் கட்டளைகள் மேலும் அவனுக்கு நம்பிக்கையும் பயபக்தியும் உண்டுதான்.
ஆனால் அதற்காக அமைச்சரிடமும் வேளாவிக்கோ மாளிகையிடமும் ஏமாந்துபோகிற அளவு தாழ்ந்துவிட விரும்பவில்லை அவன்.