பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

113



இன்றோ அமைச்சர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற ஆத்திரம் மட்டுமே அவனுள் நிரம்பியிருந்தது. ஆத்திரத்தில் அச்சம், பிரமிப்பு, மலைப்பு ஆகிய பிற உணர்வுகள் யாவும் அடிபட்டுப் போய்விட்டிருந்தன.

வேளாவிக்கோ மாளிகை அவனை அச்சுறுத்தவில்லை; ஆத்திரமூட்டியது. அங்கே வந்தவுடனே அவன் அமைச்சரைச் சந்திக்க முடியவில்லை என்பது ஆத்திரத்தை மேலும் மேலும் வளர்ப்பதற்குக் காரணமாக அமைந்ததே தவிரக் குறைக்க வில்லை. அவன் இவ்வாறு வேளாவிக்கோ மாளிகையின் தலை வாயிலில் ஆத்திரத்தோடு உலாவிக் கொண்டிருந்த வேளையில் வேளை தெரியாமல் வலியனும் பூழியனும் அவனைச் சந்திக்க வந்து சேர்ந்தார்கள். முறைக்காக அவனைப் பாராட்டவும் செய்தனர்.

“எங்கள் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் படைத் தலைவரே! கடற் கொள்ளைக்காரர்களை இவ்வளவு விரைவில் வெற்றி கொண்டு மீண்ட தங்கள் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று அவர்கள் இருவரும் பாராட்டத் தொடங்கியபோது அந்தப் பாராட்டைப் புறக்கணித்தாற்போல் அலட்சியமாயிருந்து விட்டான் குமரன் நம்பி, வலியனும் பூழியனும் இந்த அலட்சியத்தை எதிர்பார்க்கவில்லை.

“திறமையைப் பாராட்டுகிறவர்கள் எந்த அளவுக்கு மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் சில வேளைகளில் பாராட்டுக்களைக்கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை” என்று படைத் தலைவன் தன் வார்த்தைகளால் அவர்களைச் சாடினான்.

அவர்களுக்கு அவனுடைய ஆத்திரத்தின் காரணம் புரிய வில்லை. மேலே அவனுடன் தொடர்ந்து உரையாட விரும்பவில்லை. ஆதலால் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

வ-8