பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வஞ்சிமாநகரம்


 அதிகக் கவனமாயிருந்தான். அதற்காகவும் அவன் ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டியிருந்தது.

தன்னிடம் சிறைப்பட்டிருக்கிற கடம்பர்களில் ஒருவனிடமிருந்து ஆந்தைக்கண்ணனுக்கு அவன் தானாகவே எழுதுவது போல் ஒர் ஒலை எழுதிவாங்க வேண்டியிருந்தது. அந்த ஒலையில் “வழிகளைக் காட்டுவதற்காகச் சேர நாட்டு வீரர்களின் துணையோடு-மூன்று படகுகளில் நம் கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானி முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும். இங்கு யாவும் நமக்கு உறுதியான நன்னிலையிலுள்ளன. இந்த ஒலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டு ஊமை, குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். இந்த ஒலையைக் கொண்டு வருபவன் மேலும் என்மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக - இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன் - என்று எழுதி ஆந்தைக்கண்ணனுக்கு ஓர் ஊமையிடமோ அல்லது ஊமைபோல் நடிக்க முடிந்தவனிடமோ கொடுத்து, அன்று கடம்பர்களின் பிணங்களோடு கடற்கரையில் மிதக்கவிட்ட படகில் பிணங்களை நீக்கிவிட்டு அவனை அனுப்புவதென்று திட்டமிட்டான் குமரன் நம்பி.

இந்தத் திட்டம் நிறைவேறுவது அவன் கையில் மட்டுமில்லை. எழுதுகிற ஒலையில் சிறையிலிருக்கும் கடம்பர்களில் யாராவது ஒருவனுடைய கைச்சாத்துக் கிடைக்க வேண்டும். இல்லா விட்டால் ஆந்தைக்கண்ணன் அதை நம்புவது அரிதென்பது குமரனுக்குத் தெரியும். ஒற்று வேலைகளில் - போர்க் காலங்களில் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துக்குப் பயன்படுவதற்காக ஊமைகள் போலவும் செவிடர்கள் போலவும் நடித்துப் பகைவரை ஏமாற்றி இரகசியங்களை அறிந்து வருவதற்குச் சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவருடைய உதவியை இப்போது நாடுவது என்று குமரன்நம்பி முடிவு செய்து கொண்டான்.