பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

77



கடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களை மீட்பதோடு - அந்த வீரர்களோடு கடம்பர்களில் பலரையும் பொன்வானி முகத்துவாரத்துக்கு வரவழைத்துக் கொன்றுவிட்டால், ஆந்தைக்கண்ணனின் முற்றுகை பேரளவில் வலிமை குன்றியதாகப் போய்விடும். தன்வசமுள்ள வீரர்களின் வலிமை குறையக் குறைய ஆந்தைக்கண்ணனின் முற்றுகை தோல்வியை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லது அவன் தன்னுடைய கொள்ளை மரக்கலங்களோடு மேலும் சில நாட்கள் தாமதித்தால் கூட நல்லதுதான் என்றெண்ணினான் குமரன் நம்பி. முற்றுகை நீடிக்க நீடிக்கக் குயிலாலுவத்திற்குச் சென்றிருக்கும் பெரும்படையோடு பெருமன்னர் திரும்பி வருகிற சமயமும் நெருங்கிவிடலாம். படைகளின் வரவோடு மன்னரும் திரும்பிவிட்டால் பின்பு ஆந்தைக்கண்ணனை ஓட ஓட விரட்டலாம்.

ஆனாலும் அந்த வழியைவிட முதலில் சிந்தித்த வழியே நல்லது என்றெண்ணினான் அவன். ஒலை எழுதப்பட்டது. கடம்பர்களில் சிறைப்பட்டிருந்த இருவரும் அந்த ஒலையிற் கைச்சாத்திட மறுத்தனர். நீண்ட நேரம் சித்திரவதை செய்து வதைத்தபின் ஒருவன் கைச்சாத்திட இனங்கினான். அதற்குப் பின் மற்றொருவனையும் எவ்வளவோ கொடுமைப் படுத்தி வற்புறுத்தியும் பயனில்லாமல் போயிற்று. அதற்கப்புறம் படைக் கோட்டத்து ஒற்றர்களில் தன்னந்தனியே செவிட்டூமைப்போல நடித்து ஆந்தைக்கண்ணனைச் சந்திக்கப் போவதற்கு ஒரு தீரனைத் தேட வேண்டியிருந்தது. சூழ்நிலையை எண்ணி ஆந்தைக்கண்ணனிடம் சென்றால், உயிருக்கு ஆபத்தாகுமே என்ற நடுக்கத்தினால் பலர் அஞ்சினார்கள். குமரன் நம்பியின் நீண்ட உறுதிமொழிகளுக்குப் பின் ஒர் இளம்பருவத்து ஒற்றன் அந்த வேலையைச் செய்ய முன் வந்தான்.