பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

85



‘செவிட்டூமை’ - ஒற்றனை நம்பாமல் அவனைத் தன்னிடமே வைத்துக்கொண்டு, கொடுங்கோளூர் வீரர்களை அனுப்புவது போல் அனுப்பி அவர்களுக்குக் காவலாகக் கடம்பர்களையும் சேர்த்து அனுப்பியிருப்பதால் - ஆந்தைக்கண்ணன் முழு நம்பிக்கையோடு எதையும் செய்யவில்லை என்று குமரன் நம்பியால் அநுமானம் செய்துகொள்ள முடிந்தது.

தன்னால் அனுப்பப்பட்ட ‘செவிட்டூமை’ ஒற்றனை எப்போது ஆந்தைக்கண்ணன் திருப்பி அனுப்பவில்லையோ அப்போதே அந்த ஒற்றனை அவன் முழுமையாக நம்பவில்லை என்பதையும் - ஒற்றனின் ஒலையில் இருந்த செய்தியையும் முழுமையாக நம்பவில்லை என்பதையும் உய்த்துணர முடிந்தது.

கொடுங்கோளூர் வீரர்களையும் உடன் வைத்துக்கொண்டு படகில் பொன்வானி முகத்துவாரத்தின் வழியே முன்னேறும் அந்த வேளையில் கடம்பர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முயன்று கொண்டிருந்தான் கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன்.

‘வழிகளைக் காட்டுவதற்காகச் சேரநாட்டு வீரர்களின் துணைகளோடு நம் படைகளைச் சேர்ந்த கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானியாற்று முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும். இங்கு யாவும் நமக்கு உறுதியான நன்னிலையில் உள்ளன. இந்த ஓலையைக்கொண்டு வருபவன் ஒரு செவிட்டூமை. குமரன்நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். இந்த ஓலையைக்கொண்டு வருபவன் மேலும் என் மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன்’- என்றுதான் அனுப்பியிருந்த ஓலையின் செய்தியை மீண்டும் நினைவு கூர்ந்தான்.

படகில் உள்ளே வந்து கொண்டிருப்பவர்கள் தங்களைக் குமரன் நம்பி எதிர்கொண்டு வரவேற்பான் என்று எதிர்பார்க்கவும் கூடும்.