பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

89



படகு கரையை நெருங்கிற்று. ஒவ்வொருவராகத் தயங்கியபடியே கரையில் இறங்கினர்.

கடம்பர்களை ஒர் ஒரமாகவும், ஆந்தைக்கண்ணனின் கப்பலிலிருந்து சிறை மீண்டுவந்த கொடுங்கோளுர் வீரர்களை ஒர் ஒரமாகவும் கரையில் பிரித்து நிறுத்தினான் குமரன் நம்பி. அப்படி இருசாராரையும் பிரித்து நிறுத்துவது கடம்பர்களின் மனத்தில் உடனடியாக எந்தவிதமான சந்தேகத்தையும் உண்டாக்கிவிடக் கூடாதே என்று கருதி, “இந்தச் சேரவீரர்கள் நம்மிடம் சிறைப்பட்டவர்கள். ஆகையால் இவர்களைத் தனியே பிரித்து பாதுகாக்கவேண்டும் பாருங்கள்! இப்போது இவர்களை என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? இவர்கள் தப்பி ஓடாமல் இவர்களைப் பிடித்துக் கட்டிப்போடவும் என் ஆட்களை நம்மைச் சுற்றிலும் ஆயுதபாணிகளாக மறைந்திருக்கச் செய்திருக்கிறேன். அவர்களை இதோ இந்த விநாடியே கைதட்டி அழைத்துவரச் செய்கிறேன்! அவர்கள் வந்து அடக்கினால்தான் இவர்களுடைய கொழுப்பு ஒடுங்கும்” என்று கூறியபடியே இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டி ஒலிஎழுப்பினான் குமரன் நம்பி.

அடுத்த விநாடியே அந்த ஒலியின் விளைவாகச் சுற்றிலும் இருந்த புதர்களிவிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கோளுர் வீரர்கள் திரண்டோடி வந்தனர். அப்படி ஓடி வந்தவர்கள் முற்றிலும் எதிர்பாராத வண்ணம் கடம்பர்கள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி விரைந்து அவர்களை வளைத்துக் கொண்டார்கள்.

கடம்பர்களோ புதர்களிலிருந்து வரும் சேர வீரர்கள் தங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை என்ற எண்ணத்தில் எந்த விதமான முன் எச்சரிக்கையுமின்றி நின்று கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத கடம்பர்கள் அனைவரும் கொடுங்கோளுர் வீரர்களிடம் சிறைப்பட நேர்ந்தது.