பொலிவு
117
தூக்குகிறார்களோ அவர்களுக்கு மூணு குட்டு தலையிலே என்று பந்தயம் கட்டிக்கொண்டு, தண்ணீருக்குள் மூழ்கிக் கிடபார்கள்—உலர்ந்ததும் உலராததுமாகவே கூந்தலைக் கோதி முடிந்து கொள்வார்கள் - இவைகளாலே அவர்களின் உள்ளத்திலே ஒருவித சுறுசுறுப்பும், உடலிலே ஒருவித மினுமினுப்பும் ஏற்பட்டது—எழிலூட்டிற்று. இங்கே, வெந்நீர்! விதவிதமான சோப்புக் கட்டிகள்! பேசாமல், சிரிக்காமல், குளித்துவிட்டு வரவேண்டும். குளிப்பது கிராமத்திலே, விளையாட்டிலே ஒன்று. இங்கு கடமைகளில் ஒன்று! கிராமத்திலே, கண்களுக்கு விருந்தளிக்கப் பல காட்சிகள்—கிளி பழத்தைக் கொத்தித் தின்னும்; காடை கௌதாரி கீழே சிதறிக்கிடக்கும் மணிகளைப் பொறுக்கித் தின்னும்; வயலோரத்து நீரோடையில் வாத்துக்கள்; பல இடங்களில் மரம் குத்திப் பறவைகள்; மடுவிலே விதவிதமான மீன்கள், பட்டுப் பூச்சிகள்; எங்கு பார்த்தாலும் வர்ணத்தை அள்ளித் தெளித்ததுபோல, ஆட்டுக் குட்டிகள் துள்ளுவதும், கயிறு அறுத்துக் கொண்டு ஓடிவரும் காளையைப் பிடிக்க உழவர்கள் கூச்சலிடுவதும், பெண்கள் பயந்து ஒதுங்குவதும், இப்படிப் பல காட்சிகள் கண்டு, அதனாலே உள்ளத்துக்கு உற்சாகம் கிடைத்தபடி இருந்தது. முயற்சி—வெற்றி—இந்த இரு கட்டங்கள் தானே மனித உள்ளத்துக்கு எழிலும், உரமும் தருவன; அந்த நிலை, கிராமத்திலே விநாடிக்கு விநாடி ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு காரியமும் வெற்றி அளிக்கும்போது களிப்பூட்டும். இங்கு, கடிகாரத்தின் முட்கள், பிறருக்காக, ஒழுங்காக வேலை செய்து கொண்டிருப்பதுபோல, வாழ்க்கை அமைந்திருந்தது. கடிகாரம் மணி அடிப்பது போல, இங்கு சில நேரம் பேச்சு—சிரிப்பு—மற்ற நேரத்தில், ஒழுங்கான நிதானமான, அளவிடப்பட்ட ஓட்டம்!! செல்லியின் வாழ்க்கை இதுபோல இருந்ததில்லையே. அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது எண்ணிப் பார்க்கும்போது. அவள் காதிலே அவள் குதூகலமான குரலொலிபட்டு, நாட்கள் பலவாகிவிட்டன. கிராமத்திலே ஒரு நாளைக்கு நூறு தடவை அவள் கூவுவாள். பெரியப்பா! அண்ணேன்! பாட்டி! அப்போய்! அட, உன்னைத்தான்! கூனுக்கிழவா! கொண்டைக்காரி! சண்டைக்காரி—