பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலிவு

125

கிராமத்தின் கவர்ச்சியை அடிக்கடி சென்று ரசித்து வந்த வடிவேலன், கலியாணமான புதிதில் வந்து கொண்டிருந்தான் - பிறகு அந்தப் பழக்கம் நின்றுவிட்டது.

ஊர்மிளா, கிராமத்தைப் பற்றி அருவருப்புக் கொள்ளும்படிகூடச் சொல்லிவிட்டாள்.

"என்ன இருக்குது கிராமத்திலே! ஒரே பொட்டல் காடு! பொந்துகளில் நரிகள் இருக்கும்! புதர்களிலும், புற்றுகளிலும் பாம்பு இருக்கும். வயலிலே நண்டு இருக்கும். குளத்திலே முதலை இருக்கும், காளி கோயில் இருக்கும், கூளி கோயில் இருக்கும், இதன் நடுவே தலை ஒரு வேஷமும் துணி ஒரு மோசமுமாக ஜனங்கள் இருப்பார்கள், மாடு ஆடு ஒட்டிக் கொண்டு அல்லது சேறு சகதியிலே புரண்டு கொண்டு! ஓவியமாகப் பார்க்கும்போது, கண்ணுக்கு அழகுதான்! ஆனா, கிராமத்திலே வாழ்ந்துகொண்டு, கிராமத்து வேலையைச் செய்துகொண்டு, கிராமத்தார் போலவே இருந்துவிட முடியுமா? சொல்லுங்க பார்ப்போம்? பொழுது போக்குக்கு என்ன இருக்கு? கிளி கொஞ்சும், சோலையிலே என்று சொல்வீர்- சரி—இராத்திரி வேளையிலே நரி ஊளையிடும், ஆந்தை கத்தும், வெறிநாய் குலைக்கும், பயமற்றுத் தெருவிலே நடக்க முடியுமா? கிராமம், உலகம் தெரியாதவர்கள், படிப்பு அறியாதவர்கள், உழைத்து பிழைக்கறதுக்காக உள்ள இடமே தவிர, நமக்கு ஏற்ற இடமா? செச்சே! என்னாலே ஒரு நாளைக்கு மேலே தங்கி இருக்க முடியாது. பத்துப் பதினைந்து சினேகிதாளோட 'வன போஜனம்' செய்யப் போகலாம்; டார்ச் லைட் மட்டும் இருந்தால்கூடப் போதாது; பெட்ரமாக்ஸ் இருக்க வேணும், கிராமபோன் அவசியம் வேணும், சீட்டுக்கட்டு இருக்கணும். இவ்வளவு பக்கமேளம் இருந்தாத்தான் ஒரு பொழுதை ஓட்டமுடியும், கிராமத்திலே..." என்றாள். ஆமாம் என்று ஆமோதித்தது மட்டுமல்ல, வனபோஜனத்துக்கு ஏற்பாடு செய்தான் வடிவேலன், ஊர்மிளா சொன்ன முறைப்படி! ஒரே ஒரு மாறுதலுடன். பத்துப் பதினைந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு போகவில்லை—இருவர் மட்டும் சென்றனர்.