பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3
ஏழை


வன் ஓர் ஏழை—ஏளனத்துக்கு ஆளானவன். 'தொட்டது துலங்காது, கெட்டது நல்லது புரியாது, மாடுபோல் பாடுபடுவான், புத்தி கிடையாது' என்று நண்பர்களே நையாண்டி செய்வார்கள். சில வேளைகளில்தான் அவனுக்குக் கோபமும் துக்கமும் பீறிட்டுக் கொண்டு வரும். பொதுவாகச் சிரித்தபடிதான் இருப்பான்—உள்ளூர அவனுக்கே, தனக்குப் போதுமான அளவு அறிவுக்கூர்மை இல்லை என்ற எண்ணம்போலும். ஆகவே உள்ளதைத்தானே சொல்கிறார்கள், இதற்காகக் கோபித்துக் கொள்ளலாமா என்று எண்ணித் தனக்குத் தானே சமாதானம் தேடிக் கொள்வான்.

அவன் ஏழை. ஆனால் ஏழை என்ற நிலையிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும், குடைந்து கொண்டிருக்கும் மனம் கொண்டவன். எதையாவது செய்து எந்தப் பாடாவது பட்டுப் பொருள் பெறவேண்டும்; ஏழ்மையை விரட்டிடவேண்டும்—செல்வவான் ஆகவேண்டும் என்று எண்ணுவான்; கூறுவான்.

'வேலையில் சுறுசுறுப்பு இல்லை, செய்வதிலே தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. சுட்டிக் காட்டினால் இளிக்கிறான் அல்லது கெஞ்சுகிறான். தொலைத்து விடலாம் என்றாலோ பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது' என்று முதலாளி கூறுவதுண்டு பலமுறை. அப்போதெல்லாம், ஏழை எல்லப்பன், எப்படிப் பணக்காரனாவது என்று திட்டமிட்டுக் கொண்டு இருந்தான் என்பது பொருள். அதை எப்படி அவன் கூச்சத்தை விட்டு வெளியே கூறமுடியும்? முட்டாள் என்றுகூட ஏசு-