பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழை

135

மெத்த உதவியாக இருந்தேன். அப்போது அவர் கொடுத்த முறை இது."

"அமெரிக்காக்காரன், ஏன் அந்த முறையைப் பயன்படுத்தித் தானே அந்தத் தொழிலை நடத்தி இலாபம் தேடிக் கொள்ளாமல் உன்னிடம் கொடுத்தான்? காரணம்?"

"காரணமா! போன ஜென்மத்தில் அவனும் நானும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள், போயேன். கிளறிக் கிளறித் தேவையற்றதைத்தானே நீ கேட்பது வாடிக்கை. பிழைக்கத் தெரிந்தவன் செல்லப்பன்! உனக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம், குழப்பம். அமெரிக்க நிபுணர் ஆண்டர்சன் முறை என்று கூறினால் போதும்; ஒரு கேள்வியும் கேட்கமாட்டான். தொழிலை நடத்தத் தூண்டுவான். அது செல்லப்பன்!! அவன் என்ன உன்னைப் போலவா! பிழைக்கத் தெரிந்தவன்."-இந்த உரையாடல் நடைபெற்று, கந்தப்பன் கூறிடும் திட்டம் கவைக்குதவாது என்று சொல்லி அனுப்பிவிட்டான் எல்லப்பன். செல்லப்பனிடம் பேசச் சென்றான். தொழில் விஷயமாக அல்ல, பழைய மாணவர் சங்க ஆண்டு விழவுக்குத் தலைமை தாங்க அழைக்கச் சென்றபோது பேச்சின் இடையிலே, கந்தப்பன் கூறியதையும் சொன்னான்.

"ஆண்டர்சன் முறையா? அமெரிக்க முறை! ஆமாம்; அந்த முறை எங்கள் கம்பெனிக்கல்லவா சொந்தமாகிவிட்டிருக்கிறது. இருக்குமே ஆறுமாதம், ஒப்பந்தம் ஏற்பட்டு. கந்தப்பன் எப்படி உரிமை கொண்டாட முடியும். பாவம்! வழக்குப் போட்டால், வம்பிலே மாட்டிக் கொள்வானே! இப்படித்தான் விவரம் தெரியாமல், எதிலாவது 'எக்கச்சக்கமாக' மாட்டிக்கொண்டு, பிறகு திருதிருவென்று விழிப்பான். அவன் வாடிக்கை அது" என்று செல்லப்பன் கூறினான். எல்லப்பனுக்குக் கோபமே ஏற்பட்டது கந்தப்பன் மீது. வீடு சென்று பார்த்து ஏசினான். கந்தப்பனுக்கே சந்தேகம் வந்து விட்டது. ஆர்வத்திலே முன்பே கூறிவிட்டிருப்போம், நேரிடையாக ஆண்டர்சனுக்குக் கடிதம் எழுதி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கக் கூடும்; சகல தந்திரமும் தெரிந்த செல்லப்-