156
லட்சாதிபதி
வாங்கிப் போட்டுவிட வேண்டியதுதான். என்ன விலை ஆனாலும் விடக்கூடாது என்று தீர்மானித்துவிட்டார்.
அதெல்லாம் சரி! ஆனால் இப்போதைக்கு எங்கே அதை—சனியன் என்றுகூட வாய் தவறிச் சொல்லிவிட்டார்—ஒளிப்பது?
"சாமி" அலுமேலுதான் குரல் கொடுத்தாள்; நிமிர்ந்து பார்த்தார். நேற்றைய தினம்போல் "போ! போ!" என்று விரட்டி விடவில்லை. "என்ன?" என்று கேட்டார். கேட்கும்போது அலுமேலுவை நோட்டம் விட்டார். அவளுடைய அழகு, கால் என்றால் அலங்காரம் முக்கால். சாதாரண நாட்களாக இருந்தால், செட்டியார் பேச்சிலே வம்புக்கு இழுப்பார். "என்ன அலுமேலு! இந்தப் புடவைக்கு என்ன பெயர்? இந்த ஜாக்கட்தான் இப்ப பேஷனா?" என்றுகூட கேட்பார். "போங்க, சாமி நீங்க ஒண்ணு?" என்று அவள் சிணுங்குவாள். அலுமேலுக்குத் திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் அவளைப் பார்ப்பவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.
செட்டியார் இப்போது அவளை 'ரசிக்கும்' நிலையில் இல்லை; அதனால் "என்ன?" என்று மட்டும் கேட்டு வைத்தார்.
அலுமேலுவுக்கு எங்கிருந்தோ மிகுந்த வெட்கம் வந்து விட்டது. ஒரு நெளி நெளிந்தாள். "சும்மா சொல்லு" என்றார் செட்டியார்.
"ஒன்றும் இல்லைங்க. ஒரு புடவை எடுக்க வேணும். பத்து ரூபா கேக்கலாம்னு..." அலமேலு இழுத்தாள்.
செட்டியார் வரவு செலவில் இறுக்கம்தான் என்றாலும், அலுமேலுவுக்கு ஐந்து பத்து அவ்வப்போது தருவார். அதை அலுமேலுவும் சரி, செட்டியாரும் சரி எஜமானியம்மாளிடம் சொல்வது இல்லை. ஆனால் ஒன்று இரண்டாகப் பாதியளவாவது திரும்ப வாங்குவார். அந்தப் பழக்கத்தில் தான் அலுமேலு பத்து ரூபாய் கேட்டாள்.