லட்சாதிபதி
157
செட்டியார் சிந்தனையில் இருந்ததினால் உடனே பதில் சொல்லவில்லை. கொடுக்கத் தயங்குகிறாரோ என்று எண்ணிய அலுமேலு பணத்தின் அவசியத் தேவையை மீண்டும் சொன்னாள்.
"வேறே ஒண்ணும் இல்லீங்க. நாளைக்கி நான் ஊருக்குப் போறேங்க. அம்மாவுக்கு ஒரு புடவை எடுத்துக்கிட்டுப் போகலாம்னு நெனைச்சிதாங்க."
செட்டியாருடைய மனதில், எண்ணத்தில் மின்னல் பாய்ந்தது போலிருந்தது. ஏதோ தீர்மானத்திற்கு வந்தவர் போல் சிலிர்த்து உட்கார்ந்தார்.
"என்ன சொன்னே அலுமேலு? நாளைக்கு ஊருக்குப் போறயா? எந்த ஊர்?"
அலமேலுவுக்குப் புரியவில்லை. செட்டியார் ஏன் அவ்வளவு பரபரப்போடு கேட்கிறாரென்று. ஆனாலும் ரூபா வேண்டுமே! பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்.
"ஆமா சாமி! நாளக்கிப் போறேன். மண்ணூர்தானுங்களே, எங்க ஊர்—அங்கதாங்க போறேன்."
"அங்கே யார் இருக்கிறது?"
"அம்மா, அப்பா இருக்கிறாங்க. நேத்தே கொளந்தைகளை இட்டுகினு அவரு போயிருக்கிறாரு. நான் நாளைக்குப் போறேங்க..."
"சரி, நொம்ப சந்தோஷம். ரூபா தர்ரேன். அதோடு ஒரு சின்ன டிரங்கு பெட்டியும் தர்ரேன்; அதையும் எடுத்துக்கிட்டுப் போ. உடனே திரும்பிடாதே. பத்து நாள் அங்கேயே இரு. பிறகு வா. டிரங்கு பெட்டி பத்திரம். பூட்டிதான் வச்சிருக்கேன். திறக்கக் கூடாது. டிரங்கு பெட்டி உள்ளே சாமி படம் வைச்சிருக்கேன். ஒரு பத்து நாள் வெளியூர்லே வைக்கறேன்னு பிரார்த்தனை. அதான் உன்னிடம் தருகிறேன். வேறே ஒண்ணுமில்லை. பெட்டியை அனாவசியமாகத் தொடக்கூடாது. பூட்டிலே கையே படக்கூடாது. என்ன, வெச்சிருந்து கொண்டு வருவியா?" என்றார் செட்டியார்.