பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவளைப் போலவே தங்கச் சிலைகள், அந்தக் குழந்தைகள் - உமா - இரண்டாவது பெண்; கன்னி.”

“இருவரும் ஆங்கிலப் படிப்பு படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்”

“ஓர் ஆங்கிலோ – இந்தியமாது – பள்ளிக்கூட ஆசிரியை – இங்கே தங்கி இருந்து, கற்றுக்கொடுத்தார்கள். எப்போது நாம் ஆங்கிலேயருடைய ஆளுகையின் கீழ் வந்துவிட்டோமோ, அப்போதே நாம் அவர்களுடைய முறைகளை மேற்கொள்ள வேண்டியதுதானே. அப்போதுதானே ஒரு மதிப்பு ஏற்படும். மேலும், நான் வேட்டையாடிக் கொண்டும், விருந்து சாப்பிட்டுக் கொண்டும், பொழுதை ஓட்டுகிற ஜெமீன்தாரன் அல்ல. வியாபாரத் தொடர்புகள் உண்டு. சீமையில் ஒரு பெரிய கம்பெனிக்கு நிலக்கடலை ஏற்றுமதி செய்கிறேன். முத்துச் சிப்பிகளையும் அனுப்பி வைக்கிறேன்.அதனால் ஆங்கிலேயர்கள் தொடர்பு நிறைய உண்டு – நிறையப் பழக்கம். சரி! சரி! நான் பேசிப்பேசி உமக்குச் சலிப்பை உண்டாக்கிவிடக் கூடாது. ஓய்வு எடுத்துக்கொள்ள நினைப்பீர். பிரயாண அலுப்பு இருக்கும்... உம்முடைய பெயர் என்ன சொன்னீர்?”

“சொக்கலிங்கம், நண்பர்கள் 'சொக்கு' என்று செல்லமாக அழைப்பார்கள்...”

“இங்கு உமக்குப் பெயர் லிங்கம்.. நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள். சொக்கலிங்கம் என்ற பெயர் மீது எனக்கொன்றும் வெறுப்பு கிடையாது. ஆனால் இங்குச் சமையல் வேலை பார்ப்பவன் பெயர் சொக்கலிங்கம். குழந்தைகள், அவனைச் சொக்கா! சொக்கா! என்று அழைப்பார்கள். உம்முடைய பெயரும் அது போலவே இருந்தால் என்னமோபோல இருக்கும் அல்லவா, அதனாலே.... குழந்தைகளின் சௌகரியத்துக்காக உமது பெயரைக் கொஞ்சம் வெட்டிவிட்டேன், சரி! மிஸ்டர் லிங்கம்! இனி உமது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பணத்தை அவ்வப்போது மானேஜரிடம் பெற்றுக் கொள்ள