பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

43

சொக்கலிங்கம் மேன்மையான நிலையில் இருந்து வருகிறான் என்பதைக் காண்பதுடன், அதுபற்றி மற்றவர்கள் கூறுவதைக் காதுகுளிரக் கேட்கிறார்கள் அந்த முதியவர்கள்.

ஒருநாள் மாலை உமா மகேஸ்வரியே குடிசைப் பக்கம் சென்றாள்— புது ரகக் கோழிகள் கொண்டுவரப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு, அவைகளைப் பார்க்க.

சொர்ணம், மரியாதையாக வரவேற்று, அழைத்துப் போய் கோழிகளைக் காட்டுகிறார்கள். சொக்கலிங்கத்தைப் பற்றிய உரையாடல் நடக்கிறது.

"ஜெமீன் மாளிகைக்குப் புது 'வாத்தியார்' வந்திருக்கிறார் தெரியுமா? ஆள் வெள்ளைக்காரன் போலவே உடுத்திக் கொண்டிருக்கிறார். வயது இருபத்தி இரண்டு இருக்கும். நல்ல சிகப்பு. அரும்பு மீசை. அழகான கண்கள்! எப்போதும் சிரிப்பு—"

"சிரிக்கும்போது கன்னத்திலே குழிவிழுமே, அது எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா..."

"ஓ! நீ இதற்குமுன்பே புது வாத்தியாரைப் பார்த்து விட்டாயா..."

"இல்லையே...நான் இன்னும் பார்க்கவில்லை. மாளிகைக்குள்ளே போகவே வாய்ப்பு இல்லை..."

"பின்னே, எப்படிக் கன்னத்தில் குழி அழகாக விழும் என்று சொன்னாய்..."

"என்னமோ நினைப்பிலே சொன்னேன்...நீங்கள் வர்ணித்துக் கொண்டு வந்ததைக் கேட்டதிலிருந்து அப்படிச் சொல்ல வேண்டும் போலத் தோன்றிற்று, சொன்னேன்."

"படிப்பு சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல, பாட்டு, நடனம், சித்திரம் தீட்டுவது எல்லாம் தெரிந்திருக்கிறது. எனக்கென்னமோ 'டீச்சர்' அதிக நாளைக்கு இங்கே இருப்பாரென்று தோன்றவில்லை..."

"ஏனம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள்?"