46
வண்டிக்காரன்
"நான் எடுத்துக் கொண்டுபோய் கொடுக்கமாட்டேன். ஏதாவது தப்பான எண்ணம் வந்துவிடும்..கதைகளிலே படித்திருக்கிறேன்...ஒரு வாலிபனுக்கு ஒரு இளமங்கை இப்படி ஏதாவது கொடுத்தா, தப்பான எண்ணம் ஏற்பட்டுவிடும்...மேலும் அவர் எங்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்க்கிற டீச்சர். இல்லையா...அவரை ஒரு வரம்போடுதானே வைத்திருக்க வேண்டும். இந்தப் பக்கம் வருகிறமாதிரி தெரிகிறது. நான் போய்விடுகிறேன்...நீ கூப்பிட்டு தாராளமா...நம்ம ஜெமீனில் வேலை பார்க்கிறவர்தானே...கூப்பிட்டுப் பேசு; கொடு..."
"கோகிலா! எனக்கு ஒரு உதவி செய்வாயா? கேட்க கூச்சமாகக்கூட இருக்கிறது. ஆனால் என்ன செய்வது, வேறுயாரும் இல்லை..." என்று ஒருநாள் பேச்சைத் துவக்கினாள் உமா, படித்துக் கொண்டிருந்த "சிப்பிக்குள் முத்து" என்ற கதைப் புத்தகத்தைத் தூர எறிந்துவிட்டு.
உமா, தன் மனதிலே சொக்கலிங்கத்தைப் பற்றிய எண்ணத்தை வளர்த்துக் கொண்ட பிறகு, எப்போதும் காட்டாத ஆர்வத்தைப் படிப்பதில்—(காதற் சுதைகளை—மர்மக் கதைகளை) காட்ட ஆரம்பித்தாள்.
"நான் என்னம்மா உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன குறை இருக்க முடியும்" என்று கோகிலா கேட்டாள், கவலை தோய்ந்தவளாய்.
"எனக்கு அவரிடம் பேசக் கூச்சமாக இருக்கிறதடி கோகிலா..." என்று சொல்லத் தொடங்கினாள் உமா. கோகிலா சிறிது உரத்த குரலிலேயே சிரித்தாள்.
"வேடிக்கைதானம்மா நீங்கள் சொல்வது. நீங்கள் இருவரும் பழகுவதையும் அடிக்கடி பேசிக் கொள்வதையும் பார்க்கிற யாரும் ஒரு பத்து வருடமாகவாவது பழகி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இருக்க, அவரிடம் பேச எனக்குக் கூச்சமாக இருக்கிறது என்கிறீர்களே?" என்று கேட்டாள் கோகிலா.