50
வண்டிக்காரன்
சொக்கலிங்கத்துக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும் என்பதிலே அதிக அக்கரை காட்டும் ஜெமீன்தார் ஒரு நாள் குதிரைக் கொட்டிலுக்கே அழைத்துச் செல்கிறார், தன் குதிரைகளின் அருமையைக் காட்ட.
வண்டிக்காரன் வரவேற்கிறான் ஜெமீன்தாரரை! ஆனால் சொக்கலிங்கத்தையும் அல்லவா, வணங்குகிறான் சடையப்பன்.
"ஏலே சடையா! பம்பாயிலே இருந்து வாங்கினமே சவாரிக் குதிரை, அதைக் கொண்டுவா, மிஸ்டர் லிங்கம் பார்க்கட்டும்..."
"நானே போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேனே."
"வேண்டாம் மிஸ்டர் லிங்கம். குதிரை இலாயத்தைப் பயல்கள் சுத்தம் செய்தான்களோ இல்லையோ...அங்கே ஏன் நீங்க போகணும்...குமட்டும் சில வேளைகளில். அந்த இடத்திலேயே இருந்து இருந்து பழகிப் போனவங்களுக்கு ஒன்றும் இல்லை...நம்ப சடையனைப் போல சாரட் ஓட்டுவதிலே சடையனுக்குச் சமமா ஒருவரையும் சொல்ல முடியாது. தரமான ஆள். பொதுவா, வண்டிக் குதிரைகளைக் கூட சடையன்தான் கவனித்துக் கொள்வது...நல்ல உழைப்பாளி! அவனுக்கு ஏற்ற மனைவி..."
"காலமெல்லாம் உழைப்பு...ஓயாத வேலை...எல்லாம் எதற்காக..."
"யாரைப்பற்றிச் சொல்கிறாய் மிஸ்டர் லிங்கம்..."
"ஒரு ஆங்கிலக் கவி சொல்கிறார்—
ஓயாமல் உழைக்கின்றாய்
உன் மகனை ஆளாக்க
ஊர்மெச்சும் வாழ்வுதர
உருக்குலைய உழைக்கின்றாய்
பேர்சொல்லி மகன் வாழ்வான்.
பெருமைமிகும் என்றெண்ணி
பேய்மகனும் உனை மறந்தால்
நாய்மகனே ஆவான்காண்!