52
வண்டிக்காரன்
"மகனே! மோசம் செய்துவிடாதே...தெரிவித்து விடாதே...என் திட்டத்தைக் கெடுக்காதே...ஜெமீன்தாருக்குத் துளிச் சந்தேகம் வந்தாலும் போதும்; தொவைத்துவிடுவார் தொலைத்து. நீ லிங்கம்...லிங்கம்...நான் சடையன்—வண்டிக்காரன்...மறந்துவிடாதே...ஆபத்தை மூட்டிக்கொள்ளாதே..."
"என்னால் இனியும் இவ்வளவு நெருப்பை நெஞ்சிலே தாங்கிக் கொண்டு இருக்க முடியாதப்பா..."
"மிஸ்டர் லிங்கம்...எப்படி ட்ராட்...ஏ ஒன்...இல்லையா..."
"ஏ, ஒன்...ஏ, ஒன்...அப்பா! அப்பா! இங்கே இருப்பதானால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால், வேண்டாமப்பா இந்த இடம்; இந்த வேலை! வேறு இடம்...தொலைதூரம் போய்விடலாம்..."
"ஏ, சடையா! மடையா! ஓடிவாடா! குதிரை கட்டுக்கு அடங்க மறுக்கிறதே, தெரியவில்லையா...ஓடி..."
"மெள்ள...மெள்ள அப்பா! ஐயோ!..."
"விழுந்து தொலைத்தானா...மடையன்! துணைக்கு யாராவது வாலிபப்பயலை வைத்துக் கொள் என்றால் கேட்டால்தானே. மிஸ்டர் லிங்கம்! ரொம்ப நாளாகச் சொல்லுகிறேன். யாராவது உன்னுடைய சொந்தக்காரப் பையன் இருந்தால், கூடமாட உதவிக்கு வேலைக்கு வைத்துக் கொள் என்று, கேட்பதில்லை. சரி, சரி! குதிரையைக் கொண்டு போ!"
"பலமான அடிபட்டுவிட்டதுபோல இருக்கிறதே..."
"இல்லை, இல்லை! இலேசாக மரத்திலே உராய்ந்து கொண்டேன்."
"கல் அடிபட்டிருக்குமோ, இரத்தம் கசிகிறதே..."