மகன்
57
"உமது குழந்தைகள் ராமு, சோமு, ரமா இவர்களின் சிரிப்பிலே காணலாமே..."
"அதை எல்லாம் காணும் நிலையில் என் கண்கள் இல்லை..."
"அதைத்தான் சொல்கிறேன். குடி உங்களுக்கு புதிய இன்ப லோகத்தைத் தரவில்லை; இருந்த இன்ப லோகத்தைக் காணும் சக்தியைப் பறித்துவிட்டது."
"தீர யோசித்துப் பார்க்க வேண்டும். மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்; அதற்கு மருந்து உள்ளே இருக்கிறது; நீ வெளியே போ! அனுபவிக்கத் தெரியாத உனக்கு இங்கு என்ன வேலை! போ! போ! இளநீர் குடி! பார்த்திருக்கிறேன்...அந்த வண்டிக்காரக் கிழவன் கொடுத்து நீ ஆனந்தமாகப் பருகுவதை!
ஜெமீன்தாரின் மனதிலே புது எண்ணம் வளர்ந்ததும் சொக்கலிங்கத்துக்கு மேலும் மேலும் மதிப்பளிக்கலானார்.
தம்முடன் வியாபாரத் தொடர்பு கொண்ட பெரிய வெள்ளைக்காரர்களுடன் பழகும் வாய்ப்பை வலிந்து ஏற்படுத்திக் கொடுத்திடலானார்.
அப்படிப் பழகுபவர்களும், சொக்கலிங்கத்தின் நுண்ணறிவு, நேர்மை ஆகியவற்றைக் கண்டு அவனிடம் பேசுவதைச் சுவையுள்ள பொழுதுபோக்காக்கிக் கொண்டனர்.
அவ்விதம் அடிக்கடி சொக்கலிங்கத்திடம் வந்து பேசுபவர்களில் நார்மன் என்பவர் முக்கியமானவர். அவர் சம்பந்தப்பட்ட கம்பெனியில்தான் ஜெமீன்தாரருக்கு அதிகத் தொடர்பு.
டேவிட் துரையிடம் பாடம் கேட்டவர் என்பதறிந்து, சொக்கலிங்கத்திடம் நார்மன் பல பிரச்சனைகளைப்பற்றி விவாதிப்பார். சொக்கலிங்கம் தெளிவாகவும் கனிவாகவும் தன் கருத்துக்களை எடுத்துச் சொல்லுவான். நார்மன் அந்தப் பண்பைப் பெரிதும் பாராட்டி வந்தார். பலமுறை விவாதம் நடைபெற்று வந்தது.