மகன்
59
"அது ஒருவகையில் ஒப்புக் கொள்ளத்தக்கதே. எங்கள் நாட்டின் கருத்து வளர்ச்சியில் சில நூற்றாண்டுகளாக ஒரு தேக்கம் ஏற்பட்டு விட்டது. ஆனால் நார்மன்! உங்கள் நாட்டவர் ஊர் அமைக்கத் தெரியாமல் இருந்த நாட்களிலேயே இங்கு, பூம்புகாரும், மதுரையும் உறையூரும் பிறவும் எழிலோடு இருந்தன என்பதை மறந்து விடாதீர்."
"வெளி உலகத் தொடர்பு கொள்ளுவதில் ஆர்வம் காட்டவில்லை..."
"தவறான கருத்து; தூரக் கிழக்கு நாடுகளிலெல்லாம் காணலாம். நாங்கள் கொண்டிருந்த வெளியுலகத் தொடர்பின் சின்னங்களை."
"லிங்கம்! ஒரே அடியாக உங்கள் நாட்டைப் புகழ்ந்து விடுகிறீர்."
"தாங்கள் எங்கள் நாட்டிலே எதுவுமே இருந்ததில்லை! எல்லாம் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த பிச்சை என்று கூறும் விதமாகப் பேசியதால் நான் எங்கள் நாட்டுப் பழம் பெருமைகளைச் சொன்னேன்...அதேபோது இங்கே உள்ள குறைபாடுகளை நான் மறந்துவிடவில்லை."
"அதைக் கேட்க நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் குறைபாடுகளைப் போக்க நீங்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே..."
"அதற்கு எங்கே நீங்கள் பயன்படுகிறீர்கள்? ஆடம்பரமாக வாழவும், ஆடிப்பாடிக் களித்திடவும், அலங்காரங்கள் செய்து கொள்ளவும் கற்றுக் கொடுப்பதிலே உங்களுக்குள்ள அக்கரை, மேனாட்டின் உண்மையான அறிவுத் தெளிவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலே இல்லையே."
"ஆபத்தான வேலையில் அல்லவா ஈடுபடச் சொல்கிறீர். நாங்கள் எதையாவது செய்ய ஆரம்பித்து, உங்கள் மக்கள் மதத்துக்கு ஆபத்து என்று கூவத் தொடங்கி ஒரு கொந்தளிப்பு ஏற்பட வேண்டுமா—"