மகன்
61
"வேடிக்கைக்குச் சொல்லவில்லை அம்மா! எவ்வளவு திறமையாக மூடி மறைக்கப்பட்ட இரகசியத்தையும் ஒரு சிறிய கம்பளித் துண்டினாலே கண்டுபிடித்து விடலாம்; மந்திரம் போட்ட கம்பளித் துண்டு" என்று கோகிலா கூறிவிட்டு, சொக்கலிங்கத்தை கவனித்தாள்.
அவன் ஒரு இலேசான புன்னகையுடன் அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்று விட்டான்.
இரு மங்கையரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; வெவ்வேறு விதமான எண்ணங்கள் அந்த இருவர் உள்ளங்களிலும் உலவின.
சில நாட்களுக்குப் பிறகு பேரிடி விழுந்தது, கோகிலா கட்டிய மனக்கோட்டையில்.
ஜெமீன்தாரர், பல ஆண்டுகளாக இருந்து வந்த மானேஜரை நீக்கிவிட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பணியாற்றியதற்காகச் சிறிதளவு பணம் கொடுத்தார்; வேலையிலிருந்து நீக்குவதனால் வந்த வேதனை மானேஜரை வாட்டிவிட்டது.
என் தெய்வம் இருக்கும் இடத்தைவிட்டு என்னைத் துரத்துகிறார்களே என்று தனக்குள் கூறிக்கொண்டு கோகிலா குமுறினாள்.
உமாவின் தயவைத் தேடி இந்த ஆபத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்று அங்கு சென்றாள்.
"எல்லாம் உன் நன்மைக்காகத்தான் இந்த ஏற்பாடு, உன் அப்பா கெட்டிக்காரர். எந்த ஜெமீனிலும் வேலை கிடைத்துவிடும். பயப்படாதே. நீ இங்கே இருப்பது ஜெமீன்தாரர் போட்டிருக்கும் திட்டத்தைக் கெடுத்துவிடும் என்று பயந்துதான் உங்களை வெளியேற்றுகிறார்" என்றாள் உமா.
விவரம் கேட்டதற்கு உமா கூறியே விட்டாள். சொக்கலிங்கமும் நீயும் பார்த்துக் கொள்கிற பார்வை அப்பாவுக்குச் சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது என்று.