பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

63

தன் சட்டைப் பையில் வைத்திருந்த கம்பளித் துண்டை எடுத்துக் காட்டி, "இந்தக் காதற் பரிசுமீது ஆணை. கோகிலம்! நமக்குத் திருமணம் ஆகிவிட்டது" என்றான்.

அவன் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள், கோகிலம்.

"திட்டம், பாதி அளவுதான் நிறைவேறியிருக்கிறது, கோகிலம்!" என்றான் சொக்கலிங்கம்.

"காலமெல்லாம் நான் உங்களுக்காகக்காத்திருப்பேன்" என்றாள் கோகிலா.

அவன் அவளை அணைத்துக் கொண்டான். ஒரு புதிய இன்ப லோகத்திற்கு இருவரும் சென்றனர்.

குதிரை வண்டி உருண்டோடி வந்திடும் சத்தம் கேட்டது. இருவரும் நிஜ உலகு திரும்பினர்.

வெள்ளைக்காரர்கள்கூட வியந்துப் பாராட்டும்படியான அறிவுத் தெளிவுடன் சொக்கலிங்கம் இருப்பது காணக் காண ஜெமீன்தாரர் இப்படிப்பட்டவரைத் தமது மாளிகையிலே இருந்திடச் செய்வது தமது ஜெமீனுக்கே தனிக் கௌரவம் என்று எண்ணி மகிழ்ந்தார்.

மகிழ்ச்சி அதிகமாக ஏற்படும் போதெல்லாம் ஜெமீன்தாரர் விசேஷ விருந்துக்கு ஏற்பாடு செய்வது வாடிக்கை. அந்த விருந்திலே விசேஷம் என்னவென்றால் குடும்பத்தார் தவிர வெளியார் யாரும் அதிலே கலந்து கொள்ள மாட்டார்கள்.

அத்தகைய விருந்தொன்று நடந்து கொண்டிருந்தது.

ஜெமீன்தாரர் மிக்க மகிழ்ச்சியாக இருந்தார்.

பல விஷயங்களைப்பற்றி சொக்கலிங்கத்திடம் பேசி மகிழ்ந்தார்.

மாடிக் கூடத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தது விருந்து.