மகன்
71
"யார் செய்தது என்று கேள்! அக்ரமம் என்று சொல்லாதே!"
"கொலை செய்து விட்டிருக்கிறாய்!"
"இன்னும் உயிர் போகவில்லை—சாகடிக்கத்தான் சுட்டேன்...ஏன் தெரியுமா...இந்தக் கிழவன் உன்னைப் பற்றி இழிவாகப் பேசினான்...நீ...சொல்ல எனக்குக் கூச்சமாக இருக்கிறது. குழந்தையைக் கவனிக்காமல் இருந்ததற்காக அந்தக் கிழவியை இரண்டு தட்டு தட்டினேன். பாய்ந்து வந்தான் கிழவன் என் மீது; அடித்து விரட்டினேன். இந்தத் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு வந்தான், என்னைக் கொல்ல; இங்கு காவல் காத்துக் கிடக்கும் நாய்; மாமா சொல்வது சரி. இதுகளுக்கு இப்படிப்பட்ட இழிவான போக்குத்தான் இருக்கும். துப்பாக்கியைப் பறித்துக் கொண்டேன்; சுட்டேன். சுருண்டு விழுந்தான்; செத்தான் என்று நினைத்தேன்; கிழட்டுப் பயல் கூவினான்; 'கூப்பிடு! கூப்பிடு' என்று. யாரை என்று கேட்கிறேன்; 'என்மகனை! என்மகனை!' என்கிறான். 'என்னடா உளறல்' என்கிறேன். 'நானா உளறுகிறேன்...உயிர் போகுமுன் உண்மையைக் கூறுகிறேன். மாளிகையிலே இருக்கிறான் என் மகன்! எல்லோரும் பாராட்டும் அறிவாளன்! சொக்கலிங்கம்!' என்கிறான். 'சமையற்காரனையா சொல்லுகிறாய்' என்று கேட்கிறேன், மிஸ்டர் லிங்கம்! உங்களைத்தான் சொல்லுகிறான்...நீங்கள் அவனுடைய மகனாம்! வண்டிக்காரன் மகனாம்!..."
"ஆமடா ஆம்! நான் அவர் மகன்தான்! வண்டிக்காரன் மகனேதான் நான்! அவர் குடிசையிலே குமுறிக் கிடந்தார்; நான் மாளிகையிலே வாழ்வதற்காக, இன்னலையும் இழிவையும் ஏற்றுக் கொண்டார், நான் செல்வமும் சீரும் பெறவேண்டுமென்று. மிஸ்டர் நார்மன்! இவர் என் தகப்பனார்..வண்டிக்காரன், இந்த ஜெமீனில்! வாழ்ந்து கெட்டவர். நான் சிறு வயதிலேயே மாமனால் வளர்க்கப்பட்டு வந்தேன். இங்கு வந்ததே இல்லை...மகனே! 'நாலு பேர் பார்த்து மதிக்கத்தக்க நிலை உனக்கு வரவேண்டும். அதற்கு இந்த ஜெமீனில் வாத்தியார் வேலையை ஏற்றுக் கொள். உனக்கு நிறைய சிபாரிசுகள் கிடைக்கும். பெரிய உத்தியோகம்