பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

புதிய

அதனைக் கொண்டுவரக் கூடாது என்று, புதிதாக ஓர் உத்தரவு கிளம்பி விட்டதாகச் சொல்லி, வியாபாரிகள், குச்சிக் கிழங்கு வாங்குவதைக் குறைத்துக் கொண்டார்கள்—பத்து மாதம் பாடுபல கொடுத்து, பிரசவத்தின்போது ஆபத்தையே உண்டாக்கி, கடைசியில், வைத்தியர் உதவிபெற்று, வெளியே வந்த குழந்தை 'ஊமை' என்று தெரிந்தால், தாயின் மனம் என்ன பாடுபடும்! வேலப்பன் நிலைமை அப்படியாகிவிட்டது. கண் எதிரே குழந்தை இருக்கிறது. கருவில் உருவாகியது. மெத்தக் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தது, வாரி அணைத்து, உச்சி மோந்து முத்தமிட்டு, பட்ட கஷ்டம் அத்தனையும் பஞ்சாகப் பறந்ததடா பாலகனே என்று கொஞ்சிக் குலவிய தாய், தான் பெற்ற செல்வம், 'ஊமை' என்று அறிந்தால் துடிதுடிக்காதிருக்க முடியுமா? வேலப்பன், குச்சிக் கிழங்கு பாங்காக வளர வளர, அதை வெற்றியுடனும், பெருமையுடனும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கிடந்தான். அவனைப் பார்த்து வேறு சிலரும் அந்தக் கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் அதே பயிர் வைத்தார்கள்—என்றாலும் வேலப்பன் கொல்லையிலே இருந்ததுதான் முதல் தரமானது என்று எல்லோருமே சொன்னார்கள்.

"விவரம் புரியாமலே, நாம எப்பவும் நெல்லுநெல்லுன்னு கட்டிகிட்டு அழறோம். 'போட்டா நெல்லு; போடாட்டி புல்லு'ன்னு இருந்துவிடறோம். அண்ணேன்! நெல்லிலே கிடைக்கறதைவிட, வாழை, கரும்பிலே அதிகம். வெற்றிலைக் கொடிக்காலிலே நல்ல இலாபம் கிடைக்குதாம். அதுக்கெல்லாம் பாடு அதிகம், பலனும் அதிகம். குச்சுக் கிழங்குக்குப் பலன் அதிகம், பாடு அதிகம் தேவையில்லை" என்று வேலப்பன் விவரித்தபோது, "இதெல்லாம் நமக்கு எதுக்குடா? இம்மாம் காலமா நெற்பயிர் பண்ணி பிழைச்சி வந்தமா, கிழங்கு தோண்டிக்கிட்டுக் கிடந்தமா?" என்று முதியவர்கள் பேசினர்.—என்றாலும் அவர்கள்கூட வேலப்பனைப் புகழ்ந்தார்கள். "பய, கெட்டிக்காரன்தான். பாரேன் பயிரை, மூக்கணாங்கயிறு போடாத காளை முறைச்சிகிட்டு நிற்குமே, அதுபோல இருக்கு" என்று கூறினர்.