86
புதிய
முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாள். சலிப்பும், சோகமும் கொண்டாள். ஒவ்வோர் நாளும் உச்சிப் போதுக்குள் மடுவில் இறங்கிக் குளித்து விடுவாள்; தலையைக் கோதிக் கட்டிக் கொள்வாள்; 'கிழிசல்' தெரியாமல், சேலையைப் பக்குவமாகக் கட்டிக் கொள்வாள். தலைக்கு காட்டுப் பூவாவது பறித்துச் சூட்டிக்கொள்வாள், கலகலவென்று சிரித்துப் பேசுவாள்.
"கால் பூமியிலே பாவுதா" பார்டா அந்தக் குட்டிக்கு. நடக்கறப்போதே இவளை என்னமோ இந்தப் பூமி தூக்கித் தூக்கிக் குலுக்கிவிடறது போலல்லவா நடை போடறா...நாட்டியக்காரியாட்டமா..." என்று கேலியாகப் பேசுவார்கள் செல்லாயியை; கிழங்குக்குக் கிராக்கி இல்லை என்பதாலே வேலப்பன் விசாரப்பட்டான்—அதைக் கண்ட செல்லாயி, நாலு குழந்தைக்குத் தாயாகி, நாத்தி மாமி கொடுமையாலே நசுக்குண்டு போனவள் போலானாள்.
"அது ஒண்ணுத்தான் குறைச்சல். ஆமாமாம்! எல்லாரும் நல்லவங்கதான்..அவங்க அவங்க பாடு அவங்களோடே" என்று எதற்கும் எரிச்சலுடன் பதில் பேசுவாள். உடம்பு 'கசகச' வென்றாகிவிட்டதே; கழுவித் தொலைப்போம் என்றுதான் மடுவில் இறங்குவாள்—முன்புபோல மகிழ்ச்சியுடன் அல்ல.
அவளுக்கு வேலப்பனைப் பார்க்கவே பயமாக இருந்தது!
என்ன வேதனைப் படுகிறானோ, எவ்வளவு கோபமாக இருக்கிறானோ, இந்த நேரத்தில் போய்ப் பேசினால், அவனுக்கு மேலும் வேதனைதான் கிளம்பும்; மேலும், என்ன வென்றுதான் பேசுவது! போனா போவுது, கிழங்கு விலைபோகாவிட்டா என்னா, கரும்பு இல்லையா, புகையிலையிலே பணம் வராதா, என்றா தைரியம் பேச முடியும்? அதையே அல்லவா அவன் நம்பிக் கொண்டிருந்தான். வேறுவழி ஏது? அந்த வேதனையை மாற்ற முடியுமா? என்று எண்ணினாள்; இந்தச் சமயம் அடிக்கடி சென்று வேலப்பனைப் பார்ப்பதுகூடச் சரியல்லவென்று எண்ணிக் கொண்டாள்.