90
புதிய
செலவுக்கு, மகா நாட்டுக்கு டிக்கட்டு, சாப்பாட்டுச் செலவு, மாலை மரியாதைச் செலவு, எல்லாம் சேர்ந்து நூறு நூத்தி ஐம்பதுக்கு மேலே பிடிக்காது என்கிறான். இதல்லாமபடிக்கு நாமெல்லாம் ஆளுக்கு கீழுக்கு ஒண்ணு மேலுக்கு ஒண்ணு கதர் துணி வாங்கிக்கிடணுமாம்—மந்திரிகளோட மகா நாட்டிலே கதரோட போனாதான் நம்ம பேச்சை, காது கொடுத்துக் கேட்பாங்களாம்..."
"கொடிமரத்தான் சொல்றானா?"
"ஆமாம்."
கொடிமரத்தான், வேலப்பன் தலைமையிலே கிளம்பிய 'கமிட்டி'யைக் கோவைக்கு அழைத்துச் சென்றான். எல்லா மந்திரிகளையும் காட்டினான்—நூறு கெஜ தூரத்தில் இவர்களை நிறுத்தி வைத்து.
"என்னை 'நீராகாரம் இருந்தாக் கொடு கவுண்டரய்யா!' என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவர்தாம்பா, அதோ, மேசையை அடித்துப் பேசறாரே அந்த மந்திரி" என்று கமிட்டியில் ஒருவர் சொன்னார்.
"இம்மாந் தொலைவிலே இருந்து இவங்களை 'தரிசனம்' செய்தூட்டுப் போகவா, கொள்ளைப் பணத்துக்கு வேட்டு வைச்சிருக்கான் கொடிமரத்தான்" என்று கமிட்டியிலே இருந்த ஒரு கோபக்காரர் கேட்டார்.
மந்திரி பேசிக் கொண்டிருந்தார்—பேச்சு என்று கூறுவது பொருத்தமல்ல; மிரட்டிக் கொண்டிருந்தார்.
'நம்முடைய ஜனங்களுக்கே ஒரு கெட்ட சுபாவம்! எப்போதும் ஏதாவது ஒரு குறையை எடுத்துக்கூறிக்கொண்டு மூக்காலேயே அழுதுகொண்டு கிடப்பார்கள். அது இல்லை, இது இல்லை; இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்டுக் கேட்டு, ஆட்சியிலே இருப்பவர்களைத் தொல்லைப்படுத்திய படி இருக்கிறார்கள். இது பாரதத்தின் பண்பு அல்ல...இதை நம்முடைய தலைவர்கள் பல தடவை எடுத்துச் சொல்லியும் வருகிறார்கள். வெற்றிலை கொடிக்காலிலே பூச்சி வந்து விட்டது, சாமி! எங்களைக் காப்பாற்ற வேணும் என்று