பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலிவு

97

"பைத்யக்காரன் இல்லப்பா. இப்படிப் பேசினதாலே உனக்கு இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கும். நான் பைத்யம் பிடித்தவனல்ல! கிராமத்திடம் எனக்கு அவ்வளவு பாசம், மதிப்பு, மோகம் என்றுகூடச் சொல்லலாம். பத்து நாளைக்கு ஒரு தடவையாவது, ஏதாவது ஒரு கிராமம் சென்று, அங்கே உள்ள கட்சிகளைப் பார்த்தால்தான் என் மனதிலே, ஆயாசம், அலுப்பு எல்லாம் போகும். ஒரு புதுத் தெம்பு ஏற்படும்."

"அப்படி ஒரு பழக்கமா உங்களுக்கு...எங்களுக்கு ஒரு ஆறுமாசத்துக்கு ஒரு தடவையாவது, 'டவுன்' பக்கம் போயி; பளபளா விளக்கு, பலவர்ண ஜொலிப்பு, சினிமா, பஜாரு—இதை எல்லாம் பார்த்தாத்தான், ஒரு மாதிரி தெம்பு...ஆனா அதுக்குக் கொஞ்சம் காசு செலவாகும்...அதுதானே இங்கே கிடைக்கறதில்லை...ஆசையிலே மண் விழுந்துடுது அப்போதைக்கப்போ..."

மோட்டார் புறப்பட்டுவிட்டது—வேலப்பனுடைய மணம் அந்த 'மோட்டாருடன்' சென்றுவிட்டது; உடல் மட்டும்தான் கிராமத்தில் உலவிக் கொண்டிருந்தது.

அதுவும் கொஞ்சநாள் தான். வேலப்பன், 'டவுன்' வாசியாகிவிட்டான்—நிலத்தை யாருக்கோ கொடுத்துவிட்டு கடனைக் கட்டிவிட்டு, கையில் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு சென்றான். இதை வைத்து ஏதாவது தொழில் செய்யவேண்டும், வியாபாரம் நடத்தவேண்டும் என்று பலமாதிரி திட்டங்கள் மனதில். நிலம் கைமாற முடிந்தது. செல்லத்தின் மனம்? படாத பாடுபட்டது.

மடியிலே நாலு நூறு ரூபாயுடன் டவுனில் நடமாடியபோது, வேலப்பனுக்கு எப்போதும் ஏற்படாத ஒரு தெம்பும், தைரியமும் வந்தது. கடை வீதியிலே உலவும்போது அவன் கண்களிலே நம்பிக்கை ஒளிவிடும். சின்னக் கடையாக ஆரம்பித்து சாமர்த்தியமாக வியாபாரத்தை நடத்தித்தானே இவர்களிலே பலர், பெரிய கடைகள் வைத்துக் கொண்டு பணம் சேர்க்க முடிந்தது. நாம் ஏன் இப்படி செய்யக் கூடாது?

பூ-158-வ-4