பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அதருமத்தை அதருமவழியைக் கையாண்டு வெல்லலாம் என்று துணிந்தவன்; பல பெண்டிருக்கு லோலனாகச் சித்தரிக்கப் பட்டவன் அவன்.

ஆனால் இந்த நாயகன் இலட்சிய புருடன் க்ஷத்திரிய வித்து: சக்கரவர்த்தித் திருமகன், ருஷி முனிவர்களின் கண்ணுக்குக் கண்ணாக ஒழுகுபவன். மேல் வருண வருக்கமே இவனுடைய சமுதாயம். அந்தணப் பிள்ளை பிழைக்க, அந்தணனல்லாத சம்பூகன் கொலை செய்யப் படுகிறான். அவன் முற்பிறவியில் பாவம் செய்துவிட்டு, பாவம் தீரத் தவம் செய்கிறான் என்று கொலைக்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தத் தரும நியாயங்கள் க்ஷத்திரிய குலத்தை மேன்மைப்படுத்தக்கூடியவை. உத்தர இராமாயணத்தில், சீதையை நாடு கடத்திய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, க்ஷத்திரிய மன்னரின் தர்ம நியாயங்கள் ஒவ்வொன்றாக விளக்கப்படுகின்றன. அசுவமேதம் ஏகாதிபத்திய நியாயத்தைத் தெளிவாக்குகிறது. அசுரன் என்ற காரணமே, ‘லவணாசுரன்’ போன்ற மன்னர்களின் பராக்கிரமம் வீழ்த்தப்படுவதற்குரிய நியாயமாகிறது.

மேலும் இத்தரும நியாயங்கள் வன்முறையாலேயே நிலை நாட்டப்படுகின்றன.

நிறை சூலியான மனைவியை, குரூரமாக வனத்துக்கு அனுப்பும் முறையிலேயே அது தெளிவாகிறது. இந்தச் செயல், அவதார புருடன் என்று கொண்டாடப்படுவதற்குரிய மன்னனுக் குரியதல்ல. இதற்கெல்லாம் ஒரே காரணம், சீதையின் குலம் கோத்திரம் தெரியாத பிறப்பே என்று கொள்ளலாம். வருண தர்மமும், ஆண் ஆதிக்கமும், பெண்ணை ஓர் அடிமை நிலையிலும் இழிந்து தருமம் என்ற விலங்கால் பிணித்து வைத்த நிலை துலங்குகிறது. வால்மீகி முனிவர், இராமரிடம் அவர் மைந்தர்களைக் காட்டி, “இராமா, இவர்கள் உன் மைந்தர்களே... சீதை அப்பழுக்கற்ற செல்வி. இவர்களை ஏற்றுக் கொள்” என்று ஒப்படைக்க முனைந்த போதும் இராமன் தயங்குகிறான்.

அந்த நிலையிலும் இராமன் சீதையிடம் சான்று கோருவது, க்ஷத்திரிய அரக்கத் தனத்தின் உச்சநிலையை விள்ளுகிறது.