பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

105

மன்னரோ, வேறு எவரோ இல்லை. மன்னர் அதில் அமர்ந்திருக்கவில்லை.

நால்வர் அமரும் பெரிய தேர். உச்சியில் மன்னர் செல்லும்போது பறக்கும் கொடியும் இல்லை. ஒரங்களில் கட்டப்பட்ட மணிகள், வெயிலில் பளபளக்கின்றன. அப்போது தான் அவள் கூர்ந்து பார்க்கிறாள். வெண்புரவிகளின் கயிற்றைப் பற்றிக் கொண்டு சுமந்திரர் நிற்கிறார். ஏதோ கனவில் நிகழ்வது போல் இருக்கிறது.

“தேவி, ஏறி அமரலாமே?...”

அவள் ஏறுவதற்கான படிகள் தாழ்ந்து பாதம் தாங்குகின்றன.

“... மன்னர் வரவில்லையா?”

இளையவர் அதற்கு விடையிறுக்காமல் எங்கோபார்க்கிறார்.

“நான் மட்டுமா போகிறேன்?”

“தாங்கள் ஆசையைத் தெரிவித்தீர்களே?”

“ஆனால் தனிமையில் இல்லையே?”

“மன்னரின் ஆணை; நான் செயலாற்றுகிறேன்.”

“இருக்கட்டும். நான் ராணிமாதாக்களை வணங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டாமா? அங்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே? அவள் குரலுக்கு எதிரொலி இல்லை. சுமந்திரர் தேரைக் கிளப்பி விடுகிறார். அவள் முகம் தெரியாதபடி இளையவர் காவல் போல் அமர்ந்திருக்கிறார். மிகப் பெரிய பெட்டியை அவந்திகாவும், விமலையும் சுமந்து கொண்டு விரைந்து வருவது தெரிகிறது. ஆனால் அவளுக்கு ஒலி எழுப்ப முடியவில்லை. நகரவீதிகளைக் கடந்து குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. அவளுக்கு உடலும் உள்ளமும் குலுங்குகின்றன. நெஞ்சம் வாய்க்கு வந்துவிடும் போல் குலுக்கம். ஒரு மிகப்பெரிய இருள் பந்தாகவந்து எந்தக்குலுக்கலுக்கும் அசையாமல் அவளை விழுங்கி விட்டதாகத் தோன்றுகிறது.