பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வனதேவியின் மைந்தர்கள்

நெற்றியிலும், கன்னங்களிலும் மோவாயிலும், காலமும் உழைப்பும் சேர்ந்து கீறிய கீறல்கள்.

வெறும் காலமும் உழைப்பும் மட்டுமா? மன இறுக்கமும் கூடத்தான்...

இடுப்பில் ஓராடை வெளுத்துச் சாயம் போன ஆடை மாளிகை எசமானிகள் உடுத்துக் கழித்த ஆடை மார்பை மூடும் கச்சைகளும் கூட இவர்களுக்கு இல்லை. ஆனால் அவந்திகா, அவள் அன்னை, அவள் பால் குடித்த மார்பகங்களைத் துகில் கொண்டு மூட அவள் முனைந்து வெற்றி பெற்றிருக்கிறாள். மாளிகைச் சாளரங்கள் கூட உயர்துகில் அணிகின்றன. என் அவந்திகாவுக்கு மேலாடை வேண்டும் என்று, விவரம் தெரிந்த நாளில் அவள் தந்தையிடம் கேட்டு அந்த மேலாடை உரிமையைப் பெற்றுத் தந்தாள்.

அவந்திகா நீர்ச் சொம்பைக் கீழே வைத்து விட்டு ஒரு கையால் அவள் முக மலரைப் பரிவுடன் தொட்டு, முன் நெற்றிச்சுரி குழலை ஒதுக்குகிறாள். “தேவி, நேரம் மிகவாகி யிருக்கிறது. பாருங்கள், நிழல்கள் நீண்டு விழுகின்றன. இந்த நிலையில் உணவு கொள்ளாமல் இருக்கலாகாது, தேவி.”

அவளை மெதுவாகப் பற்றி எழுப்பி, நீர்ச் செம்பை எடுத்து, கழுவும் கலத்தைப் பிடித்து, அவள் மென்கரங்களை வெது வெதுப்பான நீரில் கழுவச் செய்கிறாள். இன்னொரு பணிப்பெண் வந்து, அந்தக் கலங்களை வாங்கிச் செல்ல, அவந்திகா மெல்லிய பட்டுத்துகிலால் அவள் கரங்களைத் துடைக்கிறாள். செம்பஞ்சுக் குழம்பின் பட்டுச் சிவப்பு தெரியும் மலர்க்கேசரங்கள் போன்ற விரல்கள்...

“அவந்திகா, மன்னர் உணவு கொண்டாரா?”

“மன்னர் உணவு மண்டபத்துக்கு வரவேயில்லை, தேவி, குலகுரு, மந்திரிபிரதானிகளுடன் அரசாங்க யோசனைகளில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பல ஆண்டுகள் மன்னனில்லாத நாட்டில் எத்தனையோ அலுவல்கள் இருக்கலா மல்லவா?...”