பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வனதேவியின் மைந்தர்கள்

அவள் பதி, ... சத்திய வாக்கை மீறாதவர் தாமே?

பத்துமாதங்கள் அவள் சருகும் நீரும் காற்றும் உணவாகக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். அந்தப் பத்து மாதங்களும் அக்கினி வளையம் கடந்து வந்திராத அரக்கர் கோனின் புகழும் குறைந்தது அல்ல! என்றாலும் அவள் அக்கினி குண்டத்தில் இறங்கி வெளிவந்தாள். ஆனால். அவள் பதி. அவர் அவளைப் போல் சிறையிருந்தாரா? வேடப் பெண்கள், அசுரகுலப்பெண்கள், கிஷ்கிந்தையின் வானரகுலப் பெண்கள். யாருமே அவர்மீது மையல் கொண்டிருக்கவில்லையா? அரக்கர் கோன் நெஞ்சில் இவள் புகுந்தது, இவள் குற்றம் என்றால்...? ஒரு விம்மல் உடைந்து கண்ணிர் கொப்புளிக்கிறது.

அவந்திகா குலுங்குகிறாள்.

“தேவி. தேவி. என்ன இது?...”

கண்ணிரைத் துடைக்கிறாள். ஆறுதல் செய்கிறாள்.

“சாமளி, கொஞ்சம் கனிச்சாறு கொண்டு வாம்மா பலவீனம், சரியாக உணவருந்தவில்லை...”

விமலை உறுத்துப் பார்க்கையில் சாமளி ஒடுகிறாள்.

“தேவி, வந்து கட்டிலில் ஆறுதலாக இளைப்பாறுங்கள்...”

அவந்திகா அவளை மெல்ல அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்துகிறாள். கனிச்சாறு வருகிறது. பொற்கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறாள்.

“இது மதுவா?...”

“இல்லை மகளே, இந்த மாளிகையில் மது இல்லை. இது புளிப்புக்கனியின் சாறு. கரும்பு வெல்லம் கலந்தது. இஞ்சி சேர்த்தது. பருகுங்கள் ஆரோக்கியமாக இருக்கும்...”

ஒரு வாய் வாங்கி அருந்துகிறாள்.

“அவந்திகா, ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். என்னை மாசு பற்றியிருக்குமோ என்று சந்தேகப்பட்டாரே, அதுபோல்... நானும்