பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வனதேவியின் மைந்தர்கள்


5

நீரில் இருந்து வெளிவந்தவளை, கைபற்றி அழைத்து வருகிறாள் அவந்திகா.

‘மன்னர் தோட்டத்தில் வந்து சந்திப்பார் என்றார்கள். இப்போது மாளிகை என்று இவள் சேதி சொல்கிறாள்! என்ன மாயமோ!’ அவந்திகா, விரைந்து, கூந்தலின் ஈரத்தைப் போக்க, மெல்லிய பருத்தித் துண்டினால் துடைத்து எடுக்கிறாள். துபப்புகை காட்டி, வாசனைகள் ஏற்றி கூந்தலைச் சிங்காரம் செய்கிறாள். பின்னல் போட முடியாது. மேலும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் பின்னல் போடலாகாது. நீண்டு அடர்ந்து இடுப்புக்குக் கீழ்வரும் கூந்தலை ஈரம் ஒத்தி வெவ்வேறாக்கி விடுவதே பிரயாசம்.

பூமகளோ பரபரக்கிறாள் “போதும் அவந்திகா, அப்படியே முடிந்து விடு...”

முத்துச்சரங்களைச் சுற்றி ஒருவாறு கூந்தல் அலங்காரம் நிறைவேறுகிறது. ‘வனதேவியைப் போல் மலர்ச்சரங்களைக் கைகளிலும் கழுத்திலும் சூட்டிவிடுகிறேன். கனத்த ஆபரணங்கள் வேண்டாம்!” என்று அவந்திகாமேனியில் மகரந்தப் பொடி தூவி, பட்டாடைக்கு மேல் மலர்ச்சரங்களைத் தொங்க விட்டு அழகு பார்க்கிறாள்.

அப்போது, பணிப் பெண்கள் செண்பகத் தோட்டத்தின் பக்கம், பட்டுத்துண்டு மூடிய தட்டங்களைச் சுமந்து செல்வதை விமலை பார்த்துவிட்டு விரைந்து வருகிறாள்.

“தேவி! மன்னர் செண்பகத் தோட்டத்துப்பக்கம்தான் செல்கிறார் போல் இருக்கிறது. உணவுப் பொருட்கள், கனி வகைகள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்களே?”

“நான் மாளிகைக்கே செல்கிறேன். அங்கே வந்திருக்கிறார் என்று தானே இவள் சொன்னாள்:”

பூமகள் விடுவிடென்று கல்பாவிய பாதையில் நடக்கிறாள் மாளிகையின் பின் வாசல் பூம்பந்தலின் கீழ் மன்னர் நிற்கிறார்.