பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வரலாற்றுக்கு முன்


உயர்ந்தவரையும் உணவுப் பொருளில் உயர்ந்ததையும், மருந்துப் பொருளில் உயர்ந்ததையும் ‘ஆரிய’ என்ற சொல்லாலே வழங்கினர் எனக் காணலாம். ஆரியன் என்றால் மிலேச்சன் என்ற பொருளும் உண்டு என்றாலும் பெரும்பாலான பொருள்களை நோக்கினால் ஆரிய’ என்ற சொல் உயர்வைக் குறிக்கவரும் சொல்லாகவே இருப்பதை அறிகின்றோம். தமிழ் இலக்கியத்தில் வடக்கே உள்ள ஆரியரைக் குறிக்க வடவாரியர்’ என்ற சொல்லே எடுத்தாளல் காணப்படுகிறது. எனவே வடவாரியர்’ என்ற சொல் வேண்டுமாயின் ஆரிய வர்தத்தில் சமஸ்கிருதம் பேசிய மக்களைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். மற்றும் தமிழ்நாட்டில் வடமொழி பேசி, வேதத்தை வாழ வைக்கவும், அதை நிந்திப்பவரைத் தாக்கிப் பேசவுமே பிறந்தவராகத் தம்மைக் கூறிக்கொள்ளும் திருஞானசம்பந்தரை வட நாட்டவர் ஆரியர் என்றே கொள்வதில்லை. சங்கராச்சாரியார் அவரைத் திராவிட சிசு என்றே குறித்ததாகக் கூறுவர். எனவே வேதத்தைக் கொண்டுள்ள சமஸ்கிருதத்தை ஆரியமொழி"யென அவர்களே கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. திருநாவுக்கரசர் ஆரியமும் தீந்தமிழும் ஆயினான்’ என்று கூறுவதும் சமஸ்கிருதத்தை அன்று எனலாம். ஆரியமொழி என்றால் கிரந்த மொழி என்ற பொருளும் உண்டு. சமஸ்கிருத நூல்களிலே எங்கும் அம்மொழியைக் குறிக்கும் பெயர் ஆரியம் என்று காட்டப் பெறவில்லை என்பது அம்மொழியுணர்ந்த புலவர் துணிவு. எனவே தமிழில் வழங்கும் ‘ஆரியம்’ என்ற சொல் சமஸ்கிருதமல்லாத வேறு ஒன்றைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.

ஆரியம் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் உண்டு. எனவே அழகிய ஒன்றை ஆரியம் எனக் கொள்ளல் பொருந்தும். அரியவற்றையும் ஆரியமாகக் கண்டனர். மக்களுள் கிடைத்தற்கரியவராய் ஒழுக்க சீலராய் விரதம் முதலியன மேற்கண்டவராக உள்ளவராய் வாழ்ந்த அறிவர்