பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வரலாற்றுக்கு முன்


இதற்குக் காரணம் என்ன? அகத்தியம் மட்டும் எவ்வாறு அழிவு பெற்றது? சிவராசப் பிள்ளை அவர்கள் தம் நூலில் அவ்வாறு ஒரு நூல் இருந்திருக்க இடமே இல்லை எனக் குறிப்பிடுகின்றார். அவர் கூற்றும் ஒரளவு உண்மையே என எண்ண இடமிருக்கின்றது. அந்நூல்—தொல்காப்பியத்தின் முதல் நூல்—அத்துணைச் சிறந்த ஒன்றாய் இருந்திருப்பின், அது காலங் கடந்து வாழ வேண்டுமல்லவா? இறையருளால் மொழியறிந்து, இலக்கண வரம்பறிந்து, அவ்விலக்கணத்தை எழுதிய அகத்தியருக்கே, அந்நூல் வழக் கிழந்து அழிந்தது என்பது இழிவைத் தேடித் தருவதாகும். எனவே, அவ்வாறு அழிந்தது எனக் கொள்வதினும் இல்லை என்று கொள்வதே பொருந்தும் எனக் கருதினார்கள் போலும்!

தொல்காப்பியம் தோன்றிய பின் அகத்தியம் வழக்கழிந்தது எனக் கூறினாலும், அகத்தியர் பெருமை குறைக்கப்பட்டே தீரும். தம் மாணவர் நூலின் முன் தம் நூல் வாழ்விழந்துவிட்டதென அகத்தியர் அறியின் வருந்துவாரன்றோ? மேலும், சிறந்த நூல் இயல்பாக நெடுங்காலம்காலம் கடந்து வாழும் என்பது முறை. தொல்காப்பியம் அவ்வாறு வாழ, அகத்தியம் அழிந்தமையே அதன் பெருமை இன்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். அகத்தியச் சூத்திரம் எனக் குறிக்கும் இரண்டொரு சூத்திரங்களும் சிறந்தவை எனக் கொள்ளக்கூடியன அல்ல. எனவே, இருக்கும் ஏதோ இரண்டொன்றைக் கண்டு அவற்றின்வழி அகத்தியர் பெருநூல் செய்தார் எனவும் அது மறைந்தது எனவும் கொள்ளுவதினும் அந்நூல் எழவில்லை என்றே கொள்ளல் பொருத்தமானதாகும்.

இனித் தொல்காப்பியனாருக்கும் அகத்தியனாருக்கும் இடையில் உள்ள உறவு பற்றிய ஒரு கதை நகைப்பிற்குரியதாகும். அகத்தியனார் தம் மாணாக்கராகிய தொல்காப்பியரைத் தம் மனைவியாரை அழைத்துவர அனுப்பிய