பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வரலாற்றுக்கு முன்


என்று மணிமேகலைப்பதிகம் (அடி, 11, 12) காட்டுகின்றது. அகத்தியர் அங்கு மைசூர் நாட்டு எல்லையில் குடகு மலையில் இருந்ததாகவும், அதுபோது சீகாழியில் இந்திரன் வைத்துக் காத்த பூந்தோட்டம் நீரின்றி வாடியதாகவும், விநாயகர் காக்கை வடிவம் கொண்டு சென்று அந்த அகத்தியர் கமண்டல நீரைக் கவிழ்த்ததாகவும், அதுவே பின்னர்க் காவிரியாய்ப் பெருகிப் பின்பு கொள்ளிடமாகவும் காவிரியாகவும் சீகாழிக்கு இரு மருங்கும் ஒடி அப் பூந்தோட்டத்தைச் செழிக்கச் செய்ததாகவும் கதை எழுதியிருக்கிறார்கள். இதைப் பின்னால் வந்த புலவர் ஒருவர் பாட்டாகப் பாடி விநாயகர் வணக்கமாக அமைத்துள்ளார்.

'சுரர்கு லாதிபன் தூய்மலர் நந்தனம்
பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன்
கரக நீரைக் கவிழ்த்த மதகரி -
சரண நாளும் தலைக்கணி யாக்குவாம்,'

[1]

எனப் பாடுகின்றார். இதில் மற்றொரு கதையும் அடங்கியுள்ளது. அகத்தியர் கடலை உண்டவர் என்ற கதையே அது இவ்வாறாய ‘கதைகள் கேட்பதற்கு வேடிக்கையாய் அமையினும், வரலாற்றுக்கு ஒவ்வாதனவாகவே உள்ளன. எனவே, இத்தகைய புராண மரபுக் கதைகளோடு பொருந்திய ஒரு முனிவர் அகத்தியர் என்ற பெயரோடு வாழ்ந்தார் எனக் கொள்வதினும், அகத்தியர் என்ற தமிழ் அறிஞர் வாழ்ந்தார் எனவும், அவர் பொதிகையில் சில காலம் தங்கியிருந்தார் எனவும், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பெருமதிப்புப் பெற்று விளங்கினார் எனவும் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும் என நினைக்கின்றேன்.

எனவே, தமிழ் நாட்டில் பழங்காலத்திலே ஒர் அகத்தியர் வாழ்ந்தாரா என்பது ஐயத்திற்குரியதாய்


  1. கந்தபுராணம், காப்புச் செய்யுள்.