பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வரலாற்றுக்கு முன்


'வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப,' (செய் 106)
‘கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’.
(புறத் 27)

என்னும் சூத்திர அடிகளால் தொல்காப்பியர் தெய்வம், கடவுள் என்ற சொற்களைக் கொண்டு பொருள் விளக்குகின்றமையாலும், பிற குறிப்புக்களாலும் கடவுள் வாழ்த்து அக்காலத்தில் இருந்தது எனக் கொள்வதே சிறப்புடைத்து. முழுமுதற் கடவுளாகப் பற்றற்ற கந்தழி'யையும், திணை நிலக் கடவுளர் பிறரையும் வழிபட்டார்கள் அக்காலத்தமிழர்கள் எனக் கொள்ளல் பொருந்தும். வருணன்' என்ற திணை நிலக் கடவுளன்றி வேறு வடமொழிக் கடவுளரோ, வழிபாட்டு முறையோ இதில் காணப்பெறவில்லை.

இனி, தொல்காப்பியர் 'மந்திரம்' என்னும் ஒன்றை விளக்குகின்றார். அதைச் சிலர் பின் ஆரியர்கள் வழிபாட்டுக்குக் கொண்டு வந்த மந்திர வழிபாடு எனக் கருதுவர். அது பொருந்தாது. அவரே திட்டமாக,

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.'
(செய். 171)

எனக் காட்டுவர். எனவே, ‘நிறைமொழி மாந்தர்' என்று போற்றப் பெறும் அறிவும் அருளும் நிறைந்தவர் ஆணையினால் தோற்றிய மறைமொழியே மந்திரமாகும். மறை' என்பது ஆரிய வேதத்தைக் குறியாது என்பதை முன்னரே கண்டோம். அறிவுடைய நல்ல அருளாளர் வாய்ச்சொல்லே மறையாகப் போற்றப்பட்டது. இதையே பின் வந்த திருவள்ளுவர்,

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும.'

என்று விளக்கிக் கூறினார். இதை விடுத்து. சென்னைப்பல்கலைக் கழகத்து, அகராதி (Lexicon. Vol. V. P. 3068) 'மந்திரம்' என்பதற்கு 'வேதமந்திரம்' என்றே பொருள்