பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. சோறளித்த சேரன்



மிழ்நாட்டில் வடமொழியிலிருந்து வந்து வழங்கும் கதைகள் இரண்டு : ஒன்று. இராமாயணம்; மற்றொன்று, மகாபாரதம். இராமாயணமும் பாரதமும் தமிழில் முற்றும் மொழிபெயர்க்கப்பட்ட காலம் பிந்தியது என்றாலும், அக்கதை பற்றிய பல குறிப்புக்கள் சங்க காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ்நாட்டில் வழக்கத்தில் உள்ள்ன என்பது இலக்கியங்களால் நன்கு தெரிகின்றது. இரண்டு கதைகளும் நடைபெற்றனவா அன்றிக் கற்பனையா என்பதை நாம் இங்கே எண்ணிப் பார்க்கவேண்டா. நூல்களைக் கொண்டு நோக்கின், அவற்றால் அக்காலத்திலேயே வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பதைக் காணலே இன்றியமையாததாகும்.

சங்க இலக்கியங்களில் பல கடைச்சங்க காலத்தனவேயாயினும், ஒருசில இடைச்சங்க காலத்துப் பாடல்களெனவும், கடல் கோள்களுக்கு முற்பட்டன எனவும் கொள்ள இடமுண்டு. புறநானூறு போன்ற சங்க இலக்கியத் தொகுப்புக்களைப் பின்னால் தொகுத்தனர். அவர்கள் எந்த அடிப்படையில் தொகுத்தார்கள் என்பதை நம்மால் அறிய முடியவில்லை. தொகுத்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனவும், அவர் தாமே கடவுள் வாழ்த்து ஒன்று பாடி அதையே முதலாகக் கொண்டு நூலைத் தொகுத்தார் எனவும் அறிஞர் கூறுவர். அவ்வாறு அவர் பாடிய கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக உள்ள பாடல்