பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் இராவணனும்

161


காண்டம், 269 உரை) என எழுதுகின்றார். எனவே, பிரம குலமே இராவணன் குலம் என்பது தேற்றம்.

இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் இராமாயணத்திலிருந்து காட்டலாம். எனினும், இவை அமையும் என எண்ணுகின்றேன். மற்றும், இராவணன் வேதம் வல்லவன் என்பது அவன் கயிலையின்கீழ் இருந்து சாம வேதம் ஒதியமையால் நன்கு புலனாகும். மற்றும் சிலவிடங்களில் அவனை ஆசிரியர்கள் 'ஆரிய' என்றே விளிப்பதைக் காண்கின்றோம். அனுமன் அவனைக் கண்டபோது, பல மொழியில் வல்ல சொல்லின் செல்வனாகிய அவ்வனுமன், இராவணனுடன் எம்மொழியில் பேசுவது என எண்ணி, பின் அவனது ஆரியகுல மரபு நோக்கி, ஆரியமொழியில் பேசினான் என்று வான்மீகியார் கூறியுள்ளதாகக் காட்டுவர். எனவே, ஆரிய மன்னனாகிய இராவணனை வலியத் திராவிடனாக்கி, நாட்டில் இந்த ஆரியத் திராவிடப் போராட்டம் இல்லாத அந்தக் காலத்தில் இருந்ததாகக் கற்பனை செய்தல் நாட்டு நலனுக்குத் தேவை இல்லாதது; ஒரு சிறிதும் பொருந்தாது.

எனவே, இராமனும் இராவணனும் ஒரே பிரம குலத்தில் பிறந்தவர்களே என்பதும், தாய்வழித் தந்தை வழி முறையில் இருவேறு வகைப்பட்ட ஆரிய மரபினர்க்கும் யாகம் வளர்த்தல் முதலியவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம் என்பதும், அவர்கள் பெண் காரணமாகப் பெரும்போர் விளைத்து மாபெருங்காவியம் உண்டாகக் காரணமாய் நின்றார்கள் என்பதும் அந்தப் போருக்கும் தமிழ் நாட்டுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் இராவணனுடைய இலங்கை இன்றைய இலங்கையாய் இருந்திருக்க முடியாதென்பதும், இவற்றின் அடிப்படையை மறந்து இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டத்தின் அடிப்படை என்று கூறுவது நாட்டிற்குத் தேவையற்ற வாதம் என்பதும், ஒரே மரபுக்குள் நடைபெற்ற ஒன்றை நடுவில் தம்மதாகத் தமிழர் கருதுதல் தவறு என்பதும் இந்தக் கட்டுரையால் நன்கு தெளிவாகும்.