பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

71


முரசுடைப் பெருஞ்சமம் ததைய, ஆர்ப்புஎழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!'
                                 (பதிற். 43: 6-11)

எனச் சிறப்பிக்கின்றார். இவன் பத்தினிக் கடவுளுக்குக் கல் வேண்டி இமயம் சென்றதை இப்பத்தின் பதிகம்,

'கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டிக்
கான்கவில் கானம் கணையின் போகி
ஆரிய அண்ணலை வீட்டி, பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி!'
                      (5-ஆம் பதிகம், 4-7)

எனக் காட்டுகிறது. இவ்வாறு இங்குப் பாராட்டப்பெற்ற இவன் சிறப்பும், போரும், விழாவும், வாழ்த்துமே சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டமாக உருப்பெற்றுள்ளன. சிலர் தம் கொள்கையை நிலைநாட்டுவதற்காக இச்செயலை மறுக்க வேண்டிச் சிலப்பதிகார வஞ்சிக்காண்டமே இளங்கோவடிகளால் எழுதப்பட்டது அன்று என மறுப்பர். இப்படித் தம் கொள்கையை ஆராயும் நூல்களில் புகுத்தி முடிவு காண முயன்றால், நாட்டில்-உலகில்-எத்தனையோ நூல்கள் அழிக்கப்பட வேண்டியிருக்கும். இந்தக் காலத்தில் பிந்திய செங்குட்டுவன் படை எடுப்பே இராது என்றால், பிறவற்றை யெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தென்னாட்டு இலக்கியங்களும், வடநாட்டுக் காவியங்களும் இரு நாடுகளுக்கும் வரலாற்றுக்கு நெடுநாட்கள் முன்னிருந்தே உள்ள தொடர்பினைக் காட்டுகின்றன. இவை முழுக்க முழுக்கக் கால எல்லையில் நின்று வரலாற்றுக்குப் பயன்படா என்பது ஒரளவு உண்மை என்றாலும், இவை வரலாற்றுக்கே பொருந்தா எனக் கொள்வதும், தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்துடைய இலக்கியங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் நல்ல வரலாற்றறிஞர் செய்கை ஆகாது என்பது துணிபு.