பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தெற்கையும் வடக்கையும் பிணைத்துப் பார்த்துத் தொகுத்து எழுதியவர் உளரோ என எண்ணுகின்றேன். எனவே, எனது இந்த முதல் முயற்சியில் தவறோ மாறுபாடோ இருப்பின், எடுத்துக்காட்ட அறிஞர்களை வேண்டுகிறேன்.

“வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்” என்ற இந்நூல் பரந்த பாரத நாடாகிய இந்தியாவின் பழங்கால நிலையினையும், அன்றைய வாழ்க்கை முறை நாகரிகம் முதலியவற்றையும் ஒரளவு காட்டும் என்ற நம்பிக்கையோடு நாட்டு மக்கள் முன் இந்த நூலை வைக்கிறேன். “வடக்கும் தெற்கும்” பற்றி இன்று வளரும் பல்வேறு கருத்துக்களுக்கு இடையில் அவ்விரண்டின் பிணைப்பினையும் அதன் வழித் தெரிந்த வரலாற்றையும் இந்நூல் எடுத்துக் காட்டும் என்னும் துணிபுடையேன்.

இந்நூல் வெளிவருங்கால், ஒப்பு நோக்கிப் பிழை திருத்தி நல்ல முறையில் அச்சிட்டு வெளிவர உதவிய அறிஞர் மகா வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.


தமிழ்க்கலை இல்லம், பணிவார்ந்த,
சென்னை-30, 24.2.61 அ. மு. பரமசிவானந்தம்

தமிழ்த்துறைத் தலைவர்
பச்சையப்பன் கல்லூரி சென்னை 30