காட்டிக் கொடுத்தவன்
அன்று பொழுது என்னவோ வழக்கம்போல்தான் விடிந்தது. தாமோதரனும் வழக்கம் போலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். காகங்கள் கரைவதும், இதர புள்ளினங்கள் ஆர்த்ததும் அற்புத ஒளி வீசிக் கதிரோன் வந்ததும், உலகம் இனிய காட்சிப் பொருளாகத் திகழ்ந்ததும்-எல்லாம் வழக்கம்போல்தான் இருந்தன.
என்றாலும் தாமோதரன் உள்ளத்தில் மட்டும் புரிந்துகொள்ள முடியாத ஒரு குழப்பம் குடிகொண்டு விட்டது. ஏதோ இன்னல். விளையப்போகிறது என உணர்த்தும் முன்னறிவிப்பு போன்று ஒரு குறுகுறுப்பு அவர் உள்ளத்தில் கறையான் மாதிரி அரித்துக்கொண் டிருந்தது. ஏன்? என்ன காரணம்? அவருக்கு எதுவும் புரியவில்லை. வருவதை உணர்ந்துகொள்ள முடியாதபோது, என்னவோ நேரப் போகிறது என்ற அர்த்தமற்ற, தெளிவற்ற, குழப்பம் மனசை அரித்துக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோசனம்? இவ்வாறு எண்ணினார் அவர்,
எனினும் அவர் தனது அலுவல்களை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்த அனைவரோடும் பேசினார். அன்றாட நடப்புகளை அவரிடம் சொல்லிப்போக வந்தார்கள் சில பேர். அவருடைய அறிவுக்கூர்மையை உணர்ந்து பயன்பெறவும், தங்கள் அறிவொளியைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளவும், அவருடைய ஆழ்ந்த கல்வியின் பலனைத் தாங்களும் ஓரளவாவது பெறலாமே என்றும், தங்களுடைய படிப்பின் தன்மையை விவாதத்தின்மூலம் வெளிப்படுத்திக் கொள்ளலாமே என்றும், வெவ்வேறு நோக்கங்களுடைய