பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரி 165

'இந்த மேனாமினுக்கி நம்ம வீட்டுக்கு வேண்டாம்' என்று சிவராமனும் அவர் மனைவியும் ஏகமனதாகத் தீர்மானித்து, அத்தீர்மானத்தை உடனடியாகச் செயலுக்குக் கொண்டு வந்தார்கள்.

பெரியவர்கள், தெரியாதவர்கள் தான் இப்படி ஏறுமாறாக வந்து வாய்க்கிறார்க்ள்! நம் ஊரிலிருந்து, சொந்தக்காரங்க வீட்டிலிருந்து, ஏழைச் சிறு பெண் ஒருத்தியை அழைத்து வந்தால், திருப்திகரமாக நடந்து கொள்ளக் கூடும் என்று சிவராமன் எண்ணினார். அவ்வாறே, ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். பதின்மூன்று வயது இருக்கும் அவளுக்கு. சகல வீட்டு வேலைகளையும் செய்து அனுபவப்பட்டவள்தான். குழந்தை களிடம் பிரியமாக இருந்தாள். குழந்தைகளும் 'அக்கா, அக்கா என்று அவளிடம் ஆசையோடு பழகின.

அவள் அவ்வீட்டுப் பெண் மாதிரியே. தானும் நடத்தப் படுவாள் என்று எதிர்பார்த்ததாகத் தோன்றியது. குழந்தைகளுக்குப் புதுசாகச் சட்டைகள் தைக்கும்போது, தனக்கும் பாவாடை, தாவணி சட்டைகள் வாங்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். எனக்கு ஒண்ணும் இல்லையா மாமா என்று கேட்கவும் செய்தாள். அடிக்கடி சினிமாவுக்குப் போக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். குழந்தைகளுக்காக வாங்கப்பட்டுள்ள பவுடர், கண் மை, வாசனைச் சாந்து, ஹேராயில், ரிப்பன் முதலியவற்றை அவள் தாராளமாக எடுத்து உபயோகித்தாள். வறுமைச் சுழலில் வாழ்ந்தவள் ஆதலால், இங்கு வளங்களைக் கண்டதும் 'காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல', பேராசையோடு அனைத்தையும் அனுபவிக்கத் துடித்தாள். நெய்யை வெறும் வாயில் தின்றாள். சீனியை வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டாள். சிறு குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பிஸ்கட் தினுசுகளையும், தெரிந்தும் தெரியாமலும் அமுக்குவதோடு நிற்பதில்லை. குழந்தைகள் தின்னும்போது, 'ஏய் - ஏய் அக்காளுக்கு இல்லையா?' 'அக்காளுக்குக் கொடேன்’ என்று எத்திப் பிடுங்கி மொக்குவதிலும் கருத்தாக இருந்தாள்.

அந்தப் பெண்ணின் போக்குகளும் இயல்புகளும் வீட்டு அம்மாளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. ஆகவே ஒரு நாள் அவள் வந்தது போல் சொந்த ஊருக்கே போய்ச்சேர வேண்டியதாயிற்று.

அவர்களுக்கெல்லாம் பிறகுதான் பஞ்ச வர்ணத்தம்மாளுக்கு அவ்வீட்டில் வேலை கிடைத்தது. அவளும் தனது சுயவர்ணத்தைக் காட்டி விட்டாள் என்றால், அப்படி என்ன தான் செய்திருப்பாள்?