பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளுவம் தந்த மாமணி
கவியரசு முடியரசன்
 

‘போதும் எனுமனம் பூத்த நெஞ்சினன்,
யாதும் அவாவிலன், யாமையென் றடங்கியோன்,
பயனில சொல்லாப் பாவலன், என்றும்
நயனுள மொழியும் நாவலன், என்பால்
ஈடிலா அன்பன், எளியன், இனியன்,
கேடிலா மனத்தன், கிளர்ச்சித் தலைவன்,
எங்கள் சங்கப் புலவன் இவனெனப்
பொங்கும் உணர்வாற் பொலிந்த பெற்றியன்,
பெருக்கிய புகழ்நிலை பேணிவந் துறினும்
செருக்கே அறியாச் சீர்மை யாளன்,
அருமை! அருமை!என் றான்றோர் போற்றும்
பெருமிதங் குன்றாப் பேரறி வாளன்,
தொல்காப் பியநூல் துருவித் துருவிப்
பல்கால் ஒதிப் பாங்குற மொழிந்தவன்,
உள்ளந் தெளிவுற உலகம் மகிழ்வுற
வள்ளுவந் தந்த மாமணி, நாளும்
சிந்தனைப் புதுமையைச் செவ்விதிற் காட்டும்
செந்தமிழ் நடையிற் சீரியன், கூரியன்,
ஆள்வோ ராகினும் அவர்க்கும் அறிவுரை
கேள்போல் நின்று கிளத்தும் துணிவன்,
ஆசாற் றொழுதெழும் அரும்பெறல் மாணவன்,
பேசான் பழிமொழி, ஏசான் பிறரை
நண்பன், பண்பன், நயத்தகு தமிழைக்
கண்ணென உயிரெனக் கருதும் இயல்பினன்,
கல்வியைத் தமிழிற் கற்கத் தடையெனில்
அல்வினை யதுதான் அழிகவென் றெழுந்து
வல்வில் லம்பெனச் சொல்லமர் தொடுத்தனன்,
அமர்க்களம் சென்றவன் ஆங்கே மாண்டனன்.
எமர்க்கெலாம் துயரே ஏற்றினன், ஐயஒ!
யாவன் அவனென வினவின், தீவினை
செய்யாச் செம்மல் செந்தமிழ்ப் பெம்மான்
பொய்யா மாணிக்கப் புலவன் அவனே
உண்மைத் தமிழ்த் தொண்டன்.